அதிர்ச்சியில் தமிழிசை சவுந்தரராஜன்; தாயார் காலமானதால் பெரும் சோகம்!
தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும், தற்போது தெலங்கானா மாநிலம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக பதவி வகித்து வருபவர் தமிழிசை சவுந்தரராஜன். இவரது தாயார் கிருஷ்ண குமாரி (76) வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் சோமஜ்குடாவில் உள்ள யசோதா மருத்துவமனையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆளுநர் மாளிகையில் அஞ்சலி
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (ஆகஸ்ட்18) அதிகாலை 3.30 மணியளவில் கிருஷ்ண குமாரி காலமானார். இவரது உடல் தெலங்கானா ஆளுநர் மாளிகைக்கு காலை 11 மணியளவில் கொண்டு செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர், கிருஷ்ண குமாரியின் உடல் இறுதிச் சடங்கிற்காக சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
கிருஷ்ண குமாரி அவர்கள் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. தெலங்கானா மாநில ஆளுநர் மாளிகையில் தமிழிசையின்
தந்தை மற்றும் தாயார் தங்கியிருந்தனர். தமிழிசை சவுந்திரராஜனின் தாயார் காலமானதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், காங்கிரஸ் மூத்த தலைவர் திரு.குமரி அனந்தன் அவர்களின் மனைவியும் மாண்புமிகு தெலங்கானா ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தாயாருமான திருமதி கிருஷ்ணகுமாரி அவர்கள் இன்று அதிகாலை உடல்நலக் குறைவால் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
No comments:
Post a Comment