பூச்சி தாக்குதலால் அபாயத்தில் இருக்கும் 200 ஏக்கர் கத்தரி சாகுபடி..!
தொடர் மழை மற்றும் பூச்சி தாக்குதலால் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள நல்லம்பாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் செடிகளிலேயே கத்திக்காய்கள் அழுகி வருவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
நல்லம்பாக்கம் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில்
கத்தரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கத்தரிகாய்கள் தற்போது காய்த்து குலுங்கும் தருணத்தில் உள்ளது. அவ்வப்போது பெய்து வரும் மழையால்
கத்தரியில் பூச்சி தாக்கமும், மழையால் கத்திரிகள் செடியிலேயே அழுகி வெம்பி போயும் விடுகின்றன.
இதனால் நல்ல விலைக்கு போகக்கூடிய கத்தரிக்காய்களை மூட்டை மூட்டையாக காடுகளிலும், சாலைகளிலும் விவசாயிகள் கொட்டி வருகின்றனர்.
தற்போது நாளொன்றுக்கு மூன்று மூட்டை கத்தரி பறித்தால் அதில் இரண்டு மூட்டைகள் அழுகிய நிலையில் இருப்பதால் அவற்றை தூக்கி வீச வேண்டிய நிலை உள்ளது. கத்தரி விலை மிகவும் வீழ்ச்சியடைந்து வருகிறது எனவும் 25 ரூபாய் வரை விற்பனையான கத்தரி தற்போது சந்தைகளில் 15 ரூபாய்க்கு குறைவாக எடுப்பது வேதனையாக
உள்ளது என தெரிவிக்கின்றனர்.
அழுகி வீணாகி வரும் பயிர்களை அதிகாரிகள் பார்வையிட்டு பாதிப்புகளை கணக்கிட்டு நிவாரணம் அல்லது காப்பீடு ஏதேனும் வழங்க வேண்டும். மேலும் காய்கறிகளுக்கு சந்தையில் நல்ல விலை நிர்ணயம் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment