சிறையில் பயங்கர தீ விபத்து: 41 கைதிகள் உடல் கருகி பலி!
தென் கிழக்கு ஆசிய நாடான, இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்தாவுக்கு புறநகரில் உள்ள சிறையில், அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 41 கைதிகள் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதிகாலையில் தீ விபத்து
இந்தோனேஷியாவின் பான்டென் மாகாணத்தில் உள்ளது தங்கெராங் சிறைச்சாலை. போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட மோசமான குற்றங்களில் ஈடுபட்டு கைதாகும் நபர்கள் இந்த சிறையில் தான்
அடைக்கப்படுவர். இங்கு, இந்தோனேஷிய நேரப்படி அதிகாலை 2 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் குறைந்தபட்சம் 41 கைதிகள் உடல் கருகி உயிரிழந்தனர். அதேபோல எட்டு கைதிகளுக்கு மோசமான தீக்காயமும், 72 கைதிகளுக்கு லேசான தீக்காயமும் ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து என்பதால் உயிரிழப்புகள் அதிகரித்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.தீ விபத்து ஏற்பட்ட அந்த குறிப்பிட்ட பகுதியில் 40 கைதிகளை மட்டுமே அடைத்திருக்க வேண்டும். ஆனால் இடப் பற்றாக்குறை காரணமாக சுமார் 120 பேர், அதாவது மூன்று மடங்கு அதிகமாகக் கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். உயிரிழப்புகள் அதிகரிக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த போலீசார், விசாரணை தொடர்ந்து நடத்தப்படும் என்றும் கூறினர். அதிகபட்சமாக 600 பேரை மட்டுமே அடைக்கும் வகையில் இந்த சிறை வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் தீ விபத்து ஏற்படுவதற்கு முன் இதில் 2,000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment