இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை: வைகோ முக்கிய கோரிக்கை
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் சட்டவிரோதக் குடியேறிகள் அல்ல என அறிவித்து, அவர்களுடைய விருப்பத்தைக் கேட்டு அறிந்து, குடியுரிமை வழங்க வேண்டும்'' என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, '' தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட முகாம்களில் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக, ரூ.317 கோடியில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்திருக்கின்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, அறிக்கை வெளியிட்டு இருந்தேன். அவர்களுக்கு, 7,469 வீடுகள் கட்டித் தருதல், முகாம்களில் மின் வசதி, குடிநீர், கல்வி மற்றும் பல்வேறு நலத்திட்டப் பணிகள், நிகழும் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட
இருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது. அதேபோல, அவர்களது குடியுரிமை குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக ஒரு குழு அமைப்பதாகவும் முதல்வர் அறிவித்து இருக்கின்றார்.
19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிவதற்காக, தமிழகத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கானோரை, பிரிட்டிஷார் அழைத்துக்கொண்டு சென்றனர்.
இருபதாம் நூற்றாண்டில், 1948ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் நாள் இலங்கை விடுதலை பெற்றது. அப்போது, அந்த நாட்டின் மலையகப் பகுதிகளில், தேயிலை, காபித் தோட்டங்களில் பணிபுரிந்து கொண்டு இருந்த, இந்திய வழித்தோன்றல் தமிழர்கள் 10 லட்சம் பேருக்கு இலங்கைக் குடியுரிமை கிடையாது; அவர்கள் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என அறிவித்தனர்.
பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவது, உலகம் முழுமையும் பெரும்பாலான நாடுகளில் உள்ள நடைமுறை ஆகும். ஆனால், 150 ஆண்டுகளுக்கும் மேலாக, அங்கே
வாழ்ந்து, பல தலைமுறைகள் கடந்துவிட்ட தமிழர்களுக்குக் குடியுரிமை கிடையாது என, இலங்கை அரசு அறிவித்தது, மனித உரிமைகளுக்கும், பன்னாட்டுச் சட்டங்களுக்கும் எதிரான நடவடிக்கை ஆகும். அதை எதிர்த்து, மலையகத் தமிழர்கள் பல போராட்டங்களை நடத்தினர்.
'இந்தியாவில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், பர்மா, மொரீஷியஸ் போன்ற நாடுகளுக்குச் சென்ற இந்தியர்களுக்கு, அந்த நாடுகளில் குடியுரிமை வழங்கப்பட்டு இருக்கின்றது; அதேபோல, இலங்கையும், குடியுரிமை வழங்க வேண்டும்' என, ஜவஹர்லால் நேரு தலைமையிலான இந்திய அரசு வலியுறுத்தியது.
1953-54 ஆம் ஆண்டுகளில், இலங்கைப் பிரதமர் சர் ஜான் கொத்தலாவல, நேரு ஆகியோரிடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால், குடியுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்படவில்லை. இந்தப் பிரச்சினை, 15 ஆண்டுகளாக நீடித்தது.
1962 இல்,
இந்திய - சீன எல்லைப் போர் வெடித்தது. ஏற்கெனவே, கிழக்கு பாகிஸ்தான் பிரச்சினையில், மேற்கு பாகிஸ்தானுடன் மோதல் போக்கு நீடித்து வந்தது. அதனால், இந்திய அரசின் நிலைப்பாட்டில் மாறுதல் ஏற்பட்டது. இலங்கையுடன் இணக்கத்தைக் கடைப்பிடிக்கக் கருதி, இந்திய வழித்தோன்றல் தமிழர்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ள இசைந்தனர்.
1964ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் நாள், இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, இலங்கைப் பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகே ஆகியோர், ஒரு உடன்படிக்கை செய்து கொண்டனர்.
அதன்படி, '5,25,000 பேரை இந்தியா திரும்ப அழைத்துக் கொள்வது; மீதம் உள்ள 3 லட்சம் பேருக்கு, இலங்கைக் குடியுரிமை அளிப்பது' எனத் தீர்மானித்தார்கள். படிப்படியாகத் தமிழர்கள், தமிழகத்துக்கு வரத் தொடங்கினர்; நீலகிரி, கொடைக்கானல் தேயிலைத் தோட்டப் பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர்.
No comments:
Post a Comment