சென்னையில் ஓர் உலக அதிசயம்..! - அமைகிறது டபுள் டக்கர் பாலம்!
இந்தியாவிலேயே முதன்முறையாக இரண்டு அடுக்கு சாலையாக, மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை அமைய உள்ளதாகவும், இதற்கான விரிவான திட்ட அறிக்கை மூன்று மாதங்களில் நிறைவடைந்த பின், சாலைப் பணிகள் தொடங்கும் என்றும் தமிழக நெடுஞ்சாலைத் துறை செயலாளர் தீரஜ் குமார் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக, தமிழக நெடுஞ்சாலைத் துறை செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை நவீன தொழில்நுட்பத்துடன், இந்தியாவிலேயே முதன் முறையாக இரண்டு அடுக்கு சாலையாக அமைக்கப்பட உள்ளது. மதுரவாயல் - துறைமுகம் இடையே சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் முதல் அடுக்கில் பேருந்துகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் ஆறு வழிச்சாலை ஆக அமைக்கப்படும்.
இந்த ஆறு வழிச்சாலையில் எங்கு அணுகு சாலைகள் அமைக்க வேண்டும் என்பது பரிசீலனையில் உள்ளது. இரண்டாம் அடுக்கில் அமைய உள்ள நான்கு வழி சாலை நேரடியாக மதுரவாயலில் இருந்து துறைமுகம் வரை செல்லும். அதில் கன்டெய்னர் உள்ளிட்ட சரக்கு போக்குவரத்து வாகனங்கள் செல்லும் வகையில் சாலைகள் அமைக்கப்படும்.
மொத்தம் 10 வழிச்சாலைகளில் கூடுதல் எடையுடன் வாகனங்கள் செல்வதற்கு ஏற்றாற்போல நவீன தொழில்நுட்பத்துடன் பாலம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. மொத்தம் 10 வழி சாலை,
அணுகு சாலை உள்ளிட்ட புதிய கருத்துக்கள் அடங்கிய விரிவான திட்ட அறிக்கை இன்னும் மூன்று மாதங்களில் முடிக்கப்படும்.
No comments:
Post a Comment