முதல் நாடாக முந்திக் கொண்ட கியூபா; குழந்தைகள் செம ஹேப்பி!
உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக
கொரோனா வைரஸ் பாதிப்பு பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது. முதல் அலையில் பாதிப்புகளை மட்டுமே காண முடிந்த நிலையில், இரண்டாவது அலையில் கொத்து கொத்தாக ஏற்பட்ட உயிரிழப்புகள் பெரும் அதிர்ச்சி அளித்தன.
இதற்கிடையில் கொரோனா பாதிப்பை தடுக்கும் தடுப்பூசிகள் குறித்த ஆய்வில் பல்வேறு நாடுகளும் ஈடுபட்டன. இதன் முடிவில் வெற்றிகரமான பல தடுப்பூசிகள் கிடைத்தன. இதையடுத்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகளை உலக நாடுகள் முடுக்கி விட்டுள்ளன.
அசத்திய கியூபா
அடுத்தகட்டமாக 18 வயதுக்கு கீழுள்ள சிறுவர், சிறுமியர்கள், குழந்தைகளுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்த தடுப்பூசிகள் பல்வேறு கட்ட ஆய்வுகளில் இருந்து வருகின்றன. இந்நிலையில் உலகின் முதல் நாடாக
2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசியை கண்டுபிடித்து கியூபா பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இருப்பினும் இந்த தடுப்பூசி உலக சுகாதார நிறுவனத்தால் இன்னும் அங்கீகரிக்கப்பட வில்லை. கியூபாவை பொறுத்தவரை 1.12 கோடி பேரைக் கொண்ட சிறிய நாடாக காணப்படுகிறது.
மருத்துவத்தில் முன்னேற்றம்
ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சியில் கல்வி, சுகாதாரத்தில் கியூபா மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தது. குறிப்பாக கொரோனா பாதிப்புகளால் ஐரோப்பிய நாடுகள் தத்தளித்துக் கொண்டிருந்த போது, ஏராளமான மருத்துவர்களை அனுப்பி களப்பணியாற்ற உதவின. தங்கள் நாட்டிலும் கொரோனா பரவலை கட்டுக்குள் வைத்திருந்தனர். இந்த வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஓராண்டிற்கும் மேலாக பள்ளிகளை திறக்காமல் வைத்திருந்தனர். குழந்தைகளுக்கு தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்த பின்னரே பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது.
No comments:
Post a Comment