விஷம் குடித்த சர்வையர்... மேலதிகாரிகள் நெருக்கடி காரணமா?
நெல்லை பெருமாள்புரம் நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் உதவி நில அளவையர் விஷமருந்தி தற்கொலை முயற்சி செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியை சேர்ந்தவர் மருதுபாண்டியன். இவர் தற்போது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ரெட்டியார்பட்டி பகுதியில் வசித்து வருகிறார்.
கடந்த 1996 முதல் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஆய்வு கோட்டத்தில் உதவி நில அளவையராக பணிபுரிந்துவரும் இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக உயரதிகாரிகள் மூலம் பணி நெருக்கடி ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக இவரது ஊதியமும் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் மருதுபாண்டியன் குடும்பத்தினர் வருத்ததுடன் தெரிவிக்கின்றனர்.
இதனால் கடும் மனஉளைச்சலில் இருந்த மருதுபாண்டியன், இன்று காலை பணிக்கு செல்வதற்கு முன் அவரது குடும்பத்தினரிடம் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்திருந்தார். அவர் சொன்னபடியே அலுவலகத்தில் வைத்து வண்டு கொல்லி பூச்சி மருந்தை உட்கொண்டுள்ளார்.உடனடியாக இந்த தகவலை அறிந்த குடும்பத்தினர் அலுவலகத்திற்கு அருகில் இருந்த அவரது நண்பர்களுக்கு தகவலை தெரிவித்து அவர்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மருது பாண்டியனை அழைத்து சென்றனர்.
இதனைத் தொடர்ந்து அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருதுபாண்டியனுக்கு சிகிச்சை நடந்து வருகிறது.
உயர் அதிகாரிகளின் நெருக்கடியால் மருதுபாண்டியன் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்து கொண்டதாகவும், பணி நெருக்கடி செய்த அதிகாரிகள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்களது குடும்பத்தின கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.அதிகாரியின் தற்கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக பெருமாள்புரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment