டெல்லியில் ஸ்டாலினின் மாஸ்டர் பிளான்; ஒன்று கூடும் அரசியல் கட்சிகள்!
நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எம்.பிக்களைப் பெற்று தலைமை தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளுக்கு, தலைநகரில் அலுவலகம் கட்டிக் கொள்ள மத்திய அரசு இடம் ஒதுக்கீடு செய்து வருகிறது. அந்த வகையில் டெல்லியின் தீன் தயாள் உபாத்தியாய மார்க் பகுதியில் திமுக கட்சி அலுவலகம் கட்டிக் கொள்ள இடம் ஒதுக்கப்பட்டது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில்
38 தொகுதிகளைக் கைப்பற்றி இந்தியாவின் 3வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை திமுக பெற்றது. இதையடுத்து டெல்லியில் கட்சி அலுவலகம் கட்டும் வேலைகள் தொடங்கப்பட்டன. இதற்கான பணிகள் முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு தயாராக நிற்கிறது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர், இந்த அலுவலகத்தை முதல்முறை நேரில் சென்று பார்வையிட்டார்.
சுமார் 10 ஆயிரம் சதுர அடியில் கட்சி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்திற்கு "கலைஞர் அறிவாலயம்" என்று பெயரிடப்படுகிறது. மொத்தமுள்ள 4 மாடிகளில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அருங்காட்சியகம் இடம்பெறப்
போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கருணாநிதியின் சிலை, அவர் நினைவைப் போற்றும் முக்கியத் தகவல்கள், அவர் எழுதிய புத்தகங்கள் உள்ளிட்டவையும் இடம்பெறவுள்ளன.
இந்த கட்டிடத்தின் முதல் தளம் திமுக தொழிற்சங்கத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது தளம் திமுக கட்சி அலுவலமாக இயங்கும். இங்கு எம்.பிக்கள் கூட்டம் நடத்துவதற்கான அரங்கம், கட்சி நிர்வாகிகளின் அறைகள் இடம்பெற்றுள்ளன. மூன்றாவது தளத்தில் கலந்துரையாடல் கூட்ட அரங்கமும், நான்காவது தளத்தில் கட்சி தலைவர்கள், விருந்தினர்கள் தங்கும் அறையும் அமைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment