தமிழகத்தில் ஊரடங்கு முழுவதும் ரத்தாகிறதா; முதல்வர் ஸ்டாலின் முடிவு என்ன?
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை பெரிதும் தணிந்திருக்கிறது. தினசரி தொற்று 1,600க்கும் கீழ் சரிந்துள்ளது. சில மாவட்டங்களில் ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வரும் கொரோனா பாதிப்பு மாநிலத்தின் ஒட்டுமொத்த பாதிப்பிலும் எதிரொலித்து வருகிறது. இந்த மாறுபாடுகளை கடந்த சில வாரங்களாக
காண முடிகிறது. நேற்றைய தினம் புதிதாக 1,544 பேர் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகினர். 1,576 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
19 பேர் பலியாகி இருக்கின்றனர். தற்போது 16,205 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை, கோயம்புத்தூர், செங்கல்பட்டு, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மட்டும் 100க்கும் அதிகமான எண்ணிக்கையில் பாதிப்புகள் பதிவாகி இருக்கின்றன. அதிகபட்சமாக கோயம்புத்தூரில் நேற்று 219 பேர் புதிதாக கோவிட்-19 தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். கொரோனா பரவலுக்கு ஏற்ப புதிய கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ள மாவட்ட ஆட்சியர்களிடமே பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஹாட்ஸ்பாட்களாக கண்டறியப்படும் பகுதிகள் நோய்க் கட்டுப்பாட்டு மண்டலமாக
அறிவிக்கப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் மாநில அளவிலான பொதுவான கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடைசியாக வெளியிட்ட உத்தரவின்படி, தமிழகத்தில் வரும் 15ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சில கட்டுப்பாடுகள் மட்டும் அமல்படுத்தப்பட்டன. அதாவது, அனைத்து கடற்கரை பகுதிகளிலும் ஞாயிறுதோறும் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டது. மத வழிபாட்டு தலங்களில்
வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் கூடவும், திருவிழாக்கள் நடத்தவும் தடை நீக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment