அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள்; அனுமதியை ரத்து செய்ய கோரிக்கை!
எஸ்.டி.பி.ஐ சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் நடத்த அகஸ்தியா என்ற நிறுவனத்துக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு சென்ற கல்வியாண்டில் (2020-2021) அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் அந்த அனுமதியை
இவ்வாண்டு (2021-2022) மேலும் 18 மாவட்டங்களுக்கு நீட்டித்துள்ளதோடு மட்டுமின்றி, அனுமதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளிலுள்ள 6 முதல் 9 வரையுள்ள வகுப்புகளில் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களை செயல்வழிக் கற்றல் முறையில் இணைய வழிக்கல்வியை அளிக்க அனுமதி அளித்தும், அவர்களது அறிவியல் சார்பான செயல்பாடுகளை கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் அனுமதி வழங்கி பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு தனித்துவமான தனி கல்விக்கொள்கை உருவாக்கப்படும் என்று பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்த போதும், அகஸ்தியா என்ற தொண்டு நிறுவனத்தை தமிழக அரசுப் பள்ளிகளில்
பாடம் நடத்த அனுமதியளித்திருப்பது, ஒன்றிய பாஜக அரசின் புதிய கல்விக்கொள்கையின் அம்சங்களை தமிழகத்தில் மறைமுகமாகத் திணிக்கும் செயல்திட்டங்களின் ஒன்றாக கருத வேண்டியுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் சட்டமன்றத்தில் அளித்த பதில் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளத் தக்க வகையில் இல்லை.
பெங்களூருவில் தொடங்கப்பட்ட அகஸ்தியா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் ராம்ஜி ராகவன், இந்துத்துவ ஆதரவு பின்னணி கொண்டவராக கருதப்படுகிறார். அவர் ஒன்றிய அரசின் கல்வி ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றவராவார். ஆகவே, ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்துவ ஆதரவுப் பின்னணியில் செயல்படும் இதுபோன்ற அமைப்புகளுக்கு கடந்த அதிமுக ஆட்சியை போன்று
சிவப்புக் கம்பளம் விரிக்கும் திமுக அரசின் செயல்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. சமூக நீதி, சமத்துவக் கொள்கைகளுக்கு முன்னோடியாகத் திகழும் தமிழகம் இவை குறித்த எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் அவசியமாகும்.
No comments:
Post a Comment