பெண் குழந்தைகளுக்கான இந்திராகாந்தி உதவித்தொகை
பெண் குழந்தைகளுக்கான இந்திராகாந்தி உதவித்தொகை
இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் பல்கலைக்கழக மானியக் குழுவின் திட்டங்களில் ஒன்றாக, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் முதுநிலைப் பட்டப்படிப்பு படிக்கும் ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கான இந்திராகாந்தி உதவித்தொகைத் திட்டம் (Post Graduate Scholarship For Single Girl Child) செயல்படுத்தப்பட்டுவருகிறது.
இந்தியாவில் சில மாநிலங்களில் ஆண் குழந்தைகளைப் போலன்றி பெண்களின் எண்ணிக்கை குறைந்துவருவது மிகவும் கவலைக்குரிய ஒன்றாக இருந்துவருகிறது. இந்நிலையில் பெண் குழந்தைகள் பிறப்பை அதிகப்படுத்தவும், பெண்களின் கல்வியை ஊக்குவிக்கவும், பெண்களின் நிலையை உயர்த்தவும் இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அவற்றுள் ஒன்றாக, பெண்கள் சிறந்த பணிகளைப் பெறுவதற்கேற்ற உயர்கல்வியைப் பெறுவதற்கு உதவும் வகையில், இந்திய அரசு பல்கலைக்கழக மானியக் குழுவின் வழியாக முதுநிலைப் பட்டப்படிப்பு படிக்கும் ஒரே பெண் குழந்தைகளின் கல்விக்கான நேரடிச் செலவுகளை ஈடுசெய்யும் நோக்கத்துடன் ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கான இந்திரா காந்தி உதவித்தொகையினை வழங்குகிறது. முதுநிலைப் பட்டப்படிப்புகளில் ஒற்றைப் பெண் குழந்தைகளின் கல்வியை ஆதரிப்பதுடன், சிறிய குடும்ப நெறியைக் கடைப்பிடிக்கும் மதிப்பை அங்கீகரிக்கவும் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதுநிலைப் படிப்பு கொண்ட கல்லூரிகளில் வழக்கமான, முழுநேர முதலாண்டு முதுநிலைப் படிப்பில் சேர்க்கை பெற்றிருக்கும் ஒற்றைப் பெண் குழந்தைகள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியும். இங்கு ஒற்றைப் பெண் குழந்தை என்பது அந்தக் குழந்தைக்கு சகோதரர் அல்லது சகோதரி இருக்கக் கூடாது. இரட்டைப்பெண் குழந்தைகளாக இருப்பின் விண்ணப்பிக்க முடியும். இரட்டைக் குழந்தைகளில் ஒரு ஆண் குழந்தை இருப்பின், விண்ணப்பிக்க இயலாது. இதே போன்று தொலைநிலைக் கல்வியில் படிப்பவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பிப்பவருக்கு முதுநிலை முதலாமாண்டு சேர்க்கையின் போது 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேசிய உதவித்தொகைக்கான https://scholarships.gov.in/ வலைதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். அதற்கு முன்பாக இதன் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வழிகாட்டி நெறிமுறைகளை முழுமையாகப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.
முதலாமாண்டு சேர்க்கை பெற்ற கல்லூரி / கல்வி நிறுவனத்திலிருந்து சேர்க்கைச் சான்றினைப் பெற்றிட வேண்டும். அத்துடன் ரூ.50/ மதிப்பு கொண்ட முத்திரைத்தாளில், முதல் வகுப்பு நடுவர் (First Class Magistrate) அல்லது வட்டாட்சியர் நிலைக்குக் குறையாத அரசுப் பதிவு பெற்ற அதிகாரிகளிடம் கையொப்பம் பெற்று, அதன் பின்பு அந்த உறுதிமொழி ஆவணத்தையும் (Affidavit) இணைய வழியில் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பித்தவர்களிலிருந்து, இந்தியா முழுவதும் 3000 ஒற்றைப் பெண் குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.36,200/- வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். உதவித்தொகைக்கான பணம் மாணவியின் வங்கிக் கணக்கில் மட்டுமே செலுத்தப்படும் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment