டிஜிட்டல் யுகத்தில் காதல் பிரிவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, December 26, 2021

டிஜிட்டல் யுகத்தில் காதல் பிரிவு!

டிஜிட்டல் யுகத்தில் காதல் பிரிவு!




எல்லாம் சுமுகமாக நடக்கும்போது சமூக ஊடகங்கள் மக்களை இணைக்கவும் உறவுகளைப் பேணி வளர்க்கவும் அற்புதமான வேலையைச் செய்கின்றன. ஆனால் பிரிவு வரும்போது அதே ஊடகங்கள் பிரிவின் வலியைக் கூட்டுகின்றன.
“உன் பேரைச் சொல்லும்போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்”

- அங்காடித் தெரு திரைப்படப் பாடல் வரிகள்

தமிழ் சினிமாவின் பாடல் வரிகள் அனைத்தும் காதலின் இதயம் தொடும் பரவசத்தை வருணிப்பதில் குறையொன்றுமில்லை. ஆனால் காலம் காலமாகக் கட்டுப்பெட்டிச் சமூகமாக இருக்கும் நம் மக்களிடத்தில் ஒரு ஆணோ, பெண்ணோ தொடர்புகொண்டு பேசுவதற்கு வழியில்லை. இதில் காதல் உண்மையிலேயே அதிசயமான வாய்ப்புதான். இருப்பினும் தற்போது சமூக ஊடகங்களின் வளர்ச்சிக்குப் பின் இந்த இரும்புக் கதவு பெருமளவு திறக்கப்பட்டிருக்கிறது.

இளம் வயதினர் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் இன்ன பிற சமூக ஊடகங்கள் வழியாக அறிமுகம் இல்லாத எதிர்பாலினிரிடத்திலோ தன்பாலினரிடத்திலோ தொடர்புகொள்ள அளப்பரிய வாய்ப்பு இருக்கிறது. அப்படிக் காதல் மலருவதற்கும் பழகுவதற்கும் தொழில்நுட்பம் புதிய கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறது.

அதேநேரம் புகைப்படங்களை வைத்து மிரட்டுவது, பழகிவிட்டுத் திருமணம் செய்துகொள்ளாமல் துரோகம் செய்வது, மணவாழ்க்கைக்கு வெளியே உறவுச் சண்டைகள் என்று துவங்கிப் பாலியல் வன்முறைவரை குற்றங்கள் அன்றாடம் நமது செய்தி ஊடகங்களை நிரப்புகின்றன. இதில் சில இளம் பெண்கள் தற்கொலை வரை செல்கின்றனர்.

நமது நாட்டில் ஆண் பெண் பழகுவதற்கு வாய்ப்புகள் வந்தாலும் அவை பல சமயம் இத்தகைய அவலங்களாக முடிகின்றன. இவை அதிதீவிரமாக நடக்கும் குற்றங்கள். மறுபுறம் குற்றமில்லாமல் இருபாலாரும் பழகிவிட்டுப் பின்னர் இன்றைய வாய்ப்பு, ‘சுதந்திரம்’ காரணமாகப் பிரிவதும் அதிகம் நடக்கிறது. இப்பிரச்சினை நமது நாட்டைவிட மேற்கத்திய நாடுகளில் அதிகம் என்றாலும் நமது பெருநகரங்களில் இந்தப் பிரச்சினை இப்போதே அதிகரித்துவருகிறது.

பிரிவின் வலி பெரிது

ஆணோ, பெண்ணோ உங்கள் இணையுடன் நீண்ட காலமோ இல்லை குறுகிய காலமோ உறவில் இருக்கிறீர்கள். அப்போது திடீரென ஏற்படும் பிரிவு என்பது நமது மகிழ்ச்சியைச் சடுதியில் உறிஞ்சிவிடுகிறது. குறிப்பாக அந்தப் பிரிவிற்கான முடிவை நீங்கள் எடுக்காமல் உங்களை இணையர் எடுக்கும்போது கூடுதல் வருத்தம் அடைகிறீர்கள்.

ஒரு புதிய உறவு மலர்ந்து நீடிக்கும்போது ஒருவருவர் மற்றவர் வாழ்வோடு பிணைக்கப்படுகிறார். அதாவது காதலுக்குப் பிறகு நீங்கள் தனித்தில்லை. உங்களது அகத்தில் இன்னொரு உள்ளம் இணைகிறது. நீண்டகால உறவில் உங்களது சுயத்தின் உணர்ச்சி உங்கள் இணையரோடு நெருக்கமாகிவிடுகிறது. அந்நிலையில் பிரிவு என்பது உணர்ச்சிகரமான துயரம் மட்டுமல்ல, உண்மையில் உங்கள் சுயத்தின் ஒரு பகுதியையும் இழக்கிறீர்கள். உங்கள் நானுக்குள் உங்கள் இணையரது நானும் கொஞ்சம் கலந்துவிடுகிறது.

கடந்த காலத்தில் இந்தப் பிரிவுக்கு ஒரு பிரைவைசி இருந்தது. அதிகபட்சம் உங்கள் இருவரோடு நெருங்கிய குடும்பத்தினர், நண்பர்களுக்குத்தான் பிரிவு தெரியும். இருப்பினும் சமூக ஊடகங்கள், ஸ்மார்ட் ஃபோன்கள் காலத்தில் பிரிந்து செல்லும் அனுபவம் பெருமளவு மாறிவிட்டது. காதலும் பிரிவும் தனிப்பட்ட விஷயங்களாக இருக்கும்போது அவை பொதுவெளியில் இருந்தே தீர வேண்டும் என்ற நிலை பிரச்சினைக்குரியது.

சமூக ஊடகங்களின் பங்கு

எல்லாம் சுமுகமாக நடக்கும்போது சமூக ஊடகங்கள் மக்களை இணைக்கவும் உறவுகளைப் பேணி வளர்க்கவும் அற்புதமான வேலையைச் செய்கின்றன. ஆனால் பிரிவு வரும்போது நடைமுறை ரீதியாகவும், உணர்ச்சிகரமாகவும் பிரிய வேண்டியிருக்கும். அப்போது நீங்கள் இருவரும் டிஜிட்டல் வலையில் ஒன்றாகச் சிக்கியிருந்த இறந்த காலத்தை நிகழ்காலத்திலோ, எதிர்காலத்திலோ பார்க்க முடியும். உலகறிய நீங்கள் சேர்ந்து மகிழ்ந்த விதம் இன்னும் உலகறிய இருக்கும்போது அதே உலகறியப் பிரிவது பல்வேறு சிக்கல்களைக் கொண்டுவருகிறது. இது உணர்ச்சிகளின் மேல் தொழில்நுட்பம் எழுதிய மென்பொருள் சிக்கல்.

ஒரு ஆய்வில் சமூக அறிவியல் ஆய்வாளர்கள் காதல், பிரிவு குறித்து மக்களிடம் உரையாடுகிறார்கள். 18 முதல் 52 வயதுக்குட்பட்ட 26 நபர்களிடம் பேசுகிறார்கள். ஆய்வுக்குட்பட்ட நபர்களின் உறவுகள் 6 மாதம்முதல் 29 ஆண்டுகள்வரை இருந்தன. உறவு முறிவுகளின்போது அவர்களின் டிஜிட்டல் அத்தியாயத்தை எப்படிச் சமாளித்தார்கள் அல்லது சமாளிக்க இயலவில்லை என்பது பற்றிக் கேட்கப்பட்டது.

அனைவருக்கும் இருந்த பொதுவான சிக்கல்களில் ஒன்று இணையத்திலும், தனிப்பட்ட முறையிலும் இருந்த புகைப்படங்கள் தொடர்புடையது. மகிழ்வான தருணங்களில் மக்கள் இந்த டிஜிட்டல் நினைவுகளை விரும்புகிறார்கள். நேர்மறையாகப் பகிரப்பட்ட அனுபவங்களை நினைவில் கொள்வதற்கும் நினைத்துப் பார்ப்பதற்கான தூண்டுதலாகவும் அவை இருக்கின்றன.
\
ஆனால் பிரிந்து செல்லும்போது அதே புகைப்படங்கள் மிகவும் வேதனைப்படுத்துகின்றன. தாங்கள் அவற்றை தொடர்ந்து நினைவில் கொள்ள விரும்பவில்லை என்றும், இணைப்பின் ஒரு குறியீடாக அவை இருப்பதையும் இனி விரும்பவில்லை என்றும் மக்கள் கூறுகிறார்கள்.

எனவே ஒரு உறவிலிருந்து பிரிவது என்பது தனது முன்னாள் இணையரோடு தொடர்புடைய புகைப்படங்கள், டிஜிட்டல் பதிவுகளை நீக்குவதோடு தொடர்புடையதாக இருக்கிறது. அப்படி நீக்கும் முடிவை எடுப்பவர்கள் புதிய சூழலோடு சிறப்பாகப் பொருந்திப் போகிறார்கள். முடியாதவர்கள் என்ன செய்வதென்று தெரியமால் சோகத்தில் சுழல்கிறார்கள்.

உறவின் டிஜிட்டல் அழிப்பு

பழைய உறவின் இந்த டிஜிட்டல் அழிப்பு அவ்வளவு எளிதானதாக இல்லை. தனது காதலனுடன் பிரிந்த பிறகு அவர் தொடர்புடைய பதிவுகள், புகைப்படங்களை ஃபேஸ்புக் கணக்கில் நீக்கினார் நேர்காணலுக்கு வந்த ஒருவர். ஆனால் அத்தோடு விஷயம் முடியவில்லை. சம்பந்தப்பட்டவர் தனது தாயாருடன் இருந்த புகைப்படத்திற்கு வந்த மறுமொழிகளில் முன்னாள் காதலன் கருத்து தெரிவித்திருக்கிறார். இது சிறிய பதிவு என்றாலும் நினைவை மீட்டுக்கொண்டு வந்து துன்பம் தருவதில் சிறியது, பெரியது என்று வேறுபாடு இல்லை.

சில சமயம் தொழில்நுட்பம் நீங்கள் மறக்க விரும்புவதை அனுமதிக்காது போலத் தோன்றலாம். டிஜிட்டல் பதிவுகளை நீக்குவதற்கு அபாரமான உழைப்பு தேவை. அது உணர்ச்சிவசப்படவும் வைக்கும். இதன் பொருட்டு சிலர் டிஜிட்டல் அழிப்பை செய்யாமல் விட்டுவிடுகிறார்கள். சிலரோ தமது வாழ்வை நினைவில் விடாப்படியாகத் தக்கவைக்கும் தொழில்நுட்பத்தை எதிர்த்துக் கறாராகப் போராடுகிறார்கள்.

அழியாத டிஜிட்டல் தடங்கள்

ஆய்வின் பங்கேற்பாளர் ஒருவர் சொன்ன தகவல் இது. தனது காதலியுடன் பிரிந்த பிறகு தனது மேக் (ஆப்பிள்) லேப்டாப்பில் இருந்த நிறைய புகைப்படங்களை நீக்கினார். ஆனால் அவர் தனது லேப்டாப்பில் டைம் மெஷின் எனும் மென்பொருளைப் பயன்படுத்திவருகிறார். இது கோப்புகளைப் பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் உதவும். மற்ற கோப்புகளுக்கு அது உதவிகரமாக இருந்தாலும் தனது முன்னாள் காதலி படங்களையும் அவை பாதுகாப்பாக வைத்திருப்பது கண்டு அவர் விரக்தியடைந்தார்.

ஒரு பெண்ணின் முன்னாள் காதலன் உயர்தர கேமராவை வைத்திருந்தார். எனவே அவர் எடுத்த புகைப்படங்களுக்கான ‘உரிமை’ அவருடையதாகிவிடுகிறது. எனவே தனது முன்னாள் காதலன் தனது நினைவுகள் மீதான உரிமையை வைத்திருக்கிறார் என்று சோர்வுடன் கூறுகிறார் அந்தப் பெண். காதலிக்கும்போது எதிர்காலத்தில் இந்தப் பிரச்சினை வரும் என்ற எச்சரிக்கை உணர்வோடு காதலிக்க முடியாதில்லையா?

முன்னாள் உறவுகள் குறித்த நினைவுகளை அழிப்பதில் மக்கள் கவலை கொள்வதற்குக் காரணம் என்ன? எதிர்கால உறவுகளில் பழைய நினைவகள் நெருடல் ஏற்படுத்தக் கூடாது என்பதுதான். தனது எதிர்காலக் காதலர் தன்னைப் பற்றி என்ன நினைப்பார் என்பதற்காகத்தான் பலரும் பழையதை அழிக்கிறார்கள். கூடுதலாக முன்னாள் இணையரைச் சமூக ஊடகக் கணக்குகளில் பிளாக் செய்கிறார்கள்.

மோசமானது என்னவென்றால் உங்களின் பழைய உறவு எப்போது மாறிப்போனது என்பதைச் சமூக ஊடகங்களில் பார்க்க முடியும். நேர்காணல் கொடுத்த ஒரு பெண்ணும் அவரது முன்னாள் காதலரும் பிரிந்த பிறகும் நண்பர்களாக இருக்க விரும்பினர். அதன் பொருட்டுச் சமூக ஊடகங்களில் ஒருவரையொருவர் நீக்க வேண்டாம் என்று சேர்ந்து முடிவெடுத்தனர். ஆரம்பத்தில் இது பிரச்சினையில்லை என்றாலும் அந்தப் பெண்ணின் முன்னாள் காதலன் புதிய பெண்ணுடன் டேட்டிங் செய்யத் துவங்கியபோது சிக்கல் வந்தது. மேலும் நேர்காணல் கொடுத்த பெண்ணுக்குத் தனது முன்னாள் காதலன் புதிய பெண்ணுடன் உறவு கொண்டிருப்பது மனவேதனையை அதிகரித்தது.

ஃபேஸ்புக் போன்ற தளங்கள் யாரோ ஒருவரின் முன்னாள் உறவாளரைப் பற்றிய தகவல்களை வைத்திருக்கும் ஒரு வழியாகவும் இருக்கிறது.

பிரிந்து போனவர் தமது முன்னாள் உறவாளர் சுய விவரங்களை புதுப்பிக்காமல் இருப்பது குறித்துப் பேஸ்புக்கிற்கு புகார் அளிக்கிறார். அதாவது பலரும் இவர்களின் பிரிவை அறிந்த பிறகு பழையவரின் சுயவிவரத்தைப் பார்க்கும்போது பிரச்சினை வருகிறது. அது புதுப்பிக்கப்படவில்லை என்பது குறித்தும் கவலை கொள்கிறார்கள்.

உச்சகட்டமாக இது சைபர் ஸ்டாக்கிங் (Cyber Stalking) எனப்படும் டிஜிட்டல் தளத்தில் ஒருவரைத் துன்புறுத்தும் குற்றமாகவும் மாறுகிறது. நேர்காணலுக்கு வந்த ஒரு பெண் தனது முன்னாள் காதலன் தன்னை மீண்டும் மீண்டும் சந்திக்கச் சொல்லி அனுப்பிய செய்திகளைப் புறக்கணிக்க முயன்றார். பின்னர் அந்த முன்னாள் காதலன் பல்வேறு தளங்களில் அவருக்கு அச்சுறுத்தும் செய்திகளை அனுப்பினார். பிறகு அந்த முன்னாளை அந்தப் பெண் ப்ளாக் செய்கிறார். ஆனால் இது போதாது.

இணைவதைப் பல்வேறு முறையில் சாத்தியப்படுத்தும் சமூக ஊடக நிறுவனங்கள் அதே போன்று பிரிவிலும் துண்டிப்பதிலும் எப்படி ஆதரவு வழங்க முடியும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட பெண் தனது காதலுடன் இணைந்திருந்த தருணத்தில் இருவரும் கூகுள் மேப்ஸில் தங்களின் இருப்பிடத் தரவுக்கான அணுகலைப் பகிர்ந்துகொண்டனர். அதன்படி ஒருவர் எங்கே இருக்கிறார் என்பதை மற்றவர் தெரிந்துகொள்ள முடியும். அந்தப் பெண் இந்த விவரத்தை மறந்துவிட்டாலும் முன்னாள் காதலன் அதை பயன்படுத்துகிறான். அந்தப் பெண் பணி முடிந்து வீடு திரும்பினால் அவன் குறுஞ்செய்தி போடுவான், “வீடு திரும்பிவிட்டயா?” என்று. இது தெரிந்த பிறகு அந்தப் பெண் அரும்பாடு பட்டு இந்த மேப் இணைப்பை நீக்குகிறார். இதற்கான நேரம், தொழில்நுட்பத் தேர்ச்சி எத்தனை பேருக்கு இருக்கும்?

இதற்கெல்லாம் என்ன தீர்வு?

ஒரு பதிவு போடும்போதோ அல்லது ஆன்லைனில் ஒன்றாகத் தமது வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ளும்போதோ “நாம் பிரிந்தால் என்ன செய்வது”? என்று யாரும் நினைக்க மாட்டார்கள். பிரச்சினை வரும்போது சுமையைப் பயனர் மீதே சுமத்துவதற்குப் பதிலாக டிஜிட்டல் உலகில் பழைய உறவுகளின் பதிவுகளை இணைப்பைத் துண்டிப்பதில் எப்படி உதவ முடியும் என்பதை தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆலோசிக்க வேண்டும்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் ஒருவர் தனது முன்னாள் நபரின் தடயங்களை அகற்றுவதற்கான கட்டுப்பாடுகளை எளிதாக்க வேண்டும். உறவின் நிலை மாறும்போது எது தங்கும், எது நீக்கப்படும் என்பதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் இருக்க வேண்டும். இடுகைகளிலிருந்து தரவுகளை நீக்குதல், கருத்துக்கள், விருப்பக் குறிகள், எதிர்வினைகளை மறைத்தல் போன்றவற்றைச் செய்யலாம். கூகிள் மேப்ஸ் போன்ற தளங்கள் பயனர்கள் தங்கள் தரவுகளை மற்றவர்கள் பயன்படுத்துவதை சில வாரங்கள் அல்லது மாதங்களுக்கு ஒரு முறை மதிப்பாய்வு செய்தல் போன்ற நினைவூட்டல்களைச் செய்யலாம்.

நாம் நொடிக்கு நொடி சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதால் பிரச்சினை வருவதில்லை. நம் வாழ்வில் உள்ள முக்கியமான உறவுகளைப் பதிவுசெய்து பகிர்ந்துகொள்ள விரும்புவது இயற்கையானது. சிக்கல் பிரிவின் பின்விளைவில் உள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் பயனர்களுக்குச் சிறந்த பாதுகாப்புக் கருவிகளை வழங்க வேண்டும். அந்தக் கருவிகள் மூலம் மக்கள் தங்கள் இணைய அடையாளங்களைக் கட்டுப்படுத்த உதவ வேண்டும். முக்கியமாகப் பிரிவின்போது செய்ய வேண்டியவற்றுக்கு உதவ வேண்டும். இத்தகைய கருவிகள் காதல் பிரிவுகளைத் தடுத்து நிறுத்திவிடாது என்றாலும், அதைக் கடந்து போவதற்கு உதவி செய்யும்.

அரசியல், சிவில் உரிமைகளுக்காக நாம் டிஜிட்டல் ஊடகங்களோடு போராடுவதுபோல நமது தனிப்பட்ட உரிமைகளுக்காகவும் போராட வேண்டும். இல்லையேல் ஜனநாயகத்தில் குறை வளரச்சி உள்ள இந்தியச் சமூகத்தில் டிஜிட்டல் காதல் பிரிவுகள் ஏற்படுத்தும் துயரமும் பாதிப்பும் அதிகமாகிக்கொண்டேதான் இருக்கும். மனநல ஆலோசகர்கள், டேட்டா சிவில் உரிமை ஆர்வலர்கள் இவ்விஷயத்தில் கவனம் செலுத்துவது பெரும் உதவியாக இருக்கும்.


No comments:

Post a Comment

Post Top Ad