இரவில் ஊரடங்கு, பகலில் பொதுக்கூட்டமா? நல்லா இருக்கு உங்க நியாயம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, December 27, 2021

இரவில் ஊரடங்கு, பகலில் பொதுக்கூட்டமா? நல்லா இருக்கு உங்க நியாயம்!

இரவில் ஊரடங்கு, பகலில் பொதுக்கூட்டமா? நல்லா இருக்கு உங்க நியாயம்!




தேர்தலை ஒட்டி நடத்தப்படும் பொதுக்கூட்டங்கள் தொடர்பாக வருண் காந்தி முன்வைத்துள்ள விமர்சனம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் 19 மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று பரவியுள்ளது. இதையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றன. உத்தரப் பிரதேச மாநிலத்தை பொறுத்தவரை கடந்த 25ஆம் தேதியில் இருந்து இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திருமண நிகழ்வுகளுக்கு அதிகபட்சம் 200 பேர் மட்டும் பங்கேற்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. எல்லா நேரங்களிலும் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

ஒமைக்ரான் அச்சத்தால் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சூழலில் பாஜக எம்.பி வருண் காந்தியின் ட்விட்டர் பதிவு பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது, இரவு நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் பகல் நேரத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு லட்சக்கணக்கான மக்களை அழைக்கும் சூழல் நிலவுகிறது.
இது சாமானியர்களின் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் சுகாதார உள்கட்டமைப்புகள் ஓரளவிற்கு தான் இருக்கிறது. எனவே ஒமைக்ரான் பரவலை தடுப்பதற்கு முக்கியத்துவம் தரப் போகிறார்களா? இல்லை உங்களின் தேர்தல் பலத்தை காட்ட விரும்புகிறார்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தப் பதிவு அனைத்து கட்சியினருக்கும் பொருந்தும் என்றாலும்,

உத்தரப் பிரதேசத்தை ஆளும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசை விமர்சிப்பதாகவே அமைந்திருக்கிறது. ஏனெனில் வரும் 2022 சட்டமன்ற தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலத்தை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் பிரதமர் மோடி தொடர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பது, பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வது என மக்கள் அதிகம் கூடும் சூழல்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தந்துள்ளார்.

எனவே தனது கட்சி தலைமையையே விமர்சிப்பதாய் வருண் காந்தி செயல்பாடுகள் இருக்கின்றன. இந்தப் பதிவில் உள்ள தகவல்கள் உண்மை தான் என்று பலரும் ரீ-ட்வீட் செய்து வருகின்றனர். சமீப காலமாகவே கட்சி தலைமைக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் பாஜக எம்.பி வருண் காந்தி கருத்து தெரிவித்து வருவதை கவனிக்க முடிகிறது. விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், லக்கிம்பூர் வன்முறைக்கு காரணமாக மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

மேலும் விவசாயிகளின் குரலுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து உத்தரப் பிரதேச மாநில ஆசிரியர் தகுதித் தேர்வில் வினாத்தாள் வெளியானதை ஆளும் அரசை கண்டித்து பேசியிருந்தார். தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள், தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக மீண்டும் ஒருமுறை அரசை விமர்சிக்கும் வகையில் பதிவிட்டிருப்பது ஆளும் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.



No comments:

Post a Comment

Post Top Ad