ஏழுமலையான் பக்தர்கள் ஷாக்; ஆடிப் போன திருப்பதி தேவஸ்தானம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, January 1, 2022

ஏழுமலையான் பக்தர்கள் ஷாக்; ஆடிப் போன திருப்பதி தேவஸ்தானம்!

ஏழுமலையான் பக்தர்கள் ஷாக்; ஆடிப் போன திருப்பதி தேவஸ்தானம்!



திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் 2022 காலண்டர் மோசடி குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் முதல் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட நாட்கள் பக்தர்களுக்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டது. பின்னர் நிலைமை சீரானதும் முகக்கவசம், சானிடைசர், போதிய சரீர இடைவெளி, தடுப்பூசி சான்றிதழ், கோவிட் நெகடிவ் சான்றிதழ் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. 2020ஐ காட்டிலும் கடந்த 2021ஆம் ஆண்டு நிலைமை சற்று முன்னேற்றம் கண்டது. ஆனாலும் இரண்டாவது அலையின் தாக்கத்தை தடுக்க முடியவில்லை.

இந்நிலையில் 2021ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை நடந்த முக்கியமான ஐந்து விஷயங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஆண்டு 1.04 கோடி பக்தர்கள் நடைபாதை வழியாக வந்து ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். 50 ரூபாய் லட்டு மட்டும் 5.96 கோடி என்ற எண்ணிக்கையில் விற்பனை ஆகியிருக்கிறது.

48.75 லட்சம் பேர் மொட்டை அடித்துக் கொண்டனர். உண்டியல் வசூல் 833 கோடி ரூபாய் ஆகும். 1.37 கோடி முறை அன்ன பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2022ஆம் ஆண்டிற்கான ஏழுமலையான் காலண்டரை தேவஸ்தானத் தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி மற்றும் செயல் அதிகாரி கே.எஸ்.ஜவகர் ரெட்டி ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர். 6 பக்கங்கள் கொண்ட காலண்டரில் 3டியில் வெங்கடாஜலபதி படங்கள் இடம்பெற்றுள்ளன.

ஒரு பக்கத்தில் இரண்டு மாதங்கள் காணப்படுகின்றன. அனைத்து பக்கங்களிலும் சில்வர் கோட்டிங் செய்யப்பட்டுள்ளது. லேட்டஸ்ட் தொழில்நுட்பத்தைக் கொண்டு அச்சிட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதன் விலை 450 ரூபாய். ஹைதராபாத்தில் உள்ள பிரகதி பிரிண்டர்ஸில் 25 ஆயிரம் காலண்டர்கள் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளன. தேவஸ்தான கல்யாண மண்டபங்களில் விற்பனைக்கு கிடைக்கும் பொருட்கள்,
நாடு முழுவதும் உள்ள தேவஸ்தான தகவல் மையங்கள் ஆகியவற்றின் தகவல்கள் காலண்டரில் இடம்பெற்றுள்ளன. இதனை திருமலா, திருப்பதி, விஜயவாடா, ஹைதராபாத், சென்னை, பெங்களூருவில் உள்ள பக்தர்கள் வாங்கிக் கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஆன்லைன் அமேசான் இந்தியா, இந்தியா போஸ்ட் ஆகியவற்றின் மூலம் முன்பதிவு செய்து வாங்கிக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனியார் விற்பனையாளர்கள் சிலர் அமேசான் இணையதளம் மூலம் ஏழுமலையான் காலண்டரை அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் வந்துள்ளன. இதுபற்றி தகவலறிந்த திருப்பதி தேவஸ்தானம், உடனே அமேசானை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் பக்தர்கள் நேரடியாக அமேசான் தளத்தின் மூலம் வாங்கிக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

Post Top Ad