முதல்வருக்கு ரிட்டர்ன் போன பொங்கல் பரிசு: நாம் தமிழர் தங்கை கடிதம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, January 11, 2022

முதல்வருக்கு ரிட்டர்ன் போன பொங்கல் பரிசு: நாம் தமிழர் தங்கை கடிதம்!

முதல்வருக்கு ரிட்டர்ன் போன பொங்கல் பரிசு: நாம் தமிழர் தங்கை கடிதம்!



நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் முதலமைச்சருக்கு தனது பொங்கல் பரிசை திருப்பி அனுப்பியுள்ளார்.
பொங்கல் பரிசாக 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பை தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலமாக வழங்கி வருகிறது. கடந்த முறையை விட இம்முறை அதிக பொருள்கள் வழங்கப்பட்டாலும் ரொக்க பணம் வழங்கப்படவில்லை, சில இடங்களில் பொருள்களின் எண்ணிக்கை குறைகிறது, வெளி மாநில நிறுவனங்களுக்கு டெண்டர் கொடுத்தது என பல்வேறு சர்ச்சைகளை எதிர்கட்சிகள் எழுப்பி வருகின்றன.

ஆனால் நாம் தமிழர் கட்சி சீமானோ எங்களுக்கு இலவச பொருள்களே தேவையில்லை என்று கூறிவருகிறார். அவரைப் பின்பற்றி அவரது கட்சியைச் சேர்ந்த ஸ்ரீ ரத்னா என்பவர் தனக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கே திருப்பி அனுப்பியுள்ளார்.

இதுகுறித்த அவர் தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள அந்த கடிதத்தில், "தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு மக்களுக்கு வழங்கிய பொங்கல் பரிசு பொருட்களை நான் பெற்றுக்கொண்டேன். துணிப்பையுடன் மொத்தம் 20 பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது. நன்றி.


ஆனால், தமிழ் நாட்டின் குடிமகளாய் நான் எதிர்பார்ப்பது இந்த ஒரு நாள் கூத்தாய் முடிந்துவிடும் இலவச ரூ -300 மதிப்புள்ள பொருட்களை அல்ல. மாறாக ஒவ்வொரு நாளும் எனது குடும்பத்தின் தேவையை நிறைவு செய்து கொள்ளும் விதமாக ஒரு அரசு பணியைத்தான்.

இந்த இலவச பரிசு பொருட்களை எனது தனிமனித வருமானத்தின் மூலம் என்னால் பெற்றுக் கொள்ள இயலும். ஆனால், தரமான இலவச மருத்துவம், தூய காற்று, நல்ல குடிநீர், தரமான இலவச கல்வி. கல்விக்கேற்ற அரசு வேலை, வேலைக்கேற்ற ஊதியம் ஆகியவற்றை தனிநபராய் என்னால் பெற இயலாது. என்னால் தனிநபராய் உழைத்து பெற முடிந்த ஒன்றை இலவசம் என்னும் பெயரில் இதுவரை நான் பெற்று எனது சுய மரியாதையை இழந்தது போதும்.

தமிழ் நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களிலும் படித்து முடித்து அரசு பணிக்காக காத்திருக்கும் இளைய பிள்ளைகளுக்கு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும், மேற்கூறிய மக்களின் அடிப்படைத் தேவைகளையும் எங்களுக்கு வழங்கி இலவசத்துக்கு கையேந்தும் நிலையிலிருந்து எம்மின சொந்தங்களை உயர்த்தி அவரவரின் தேவையை அவரவரே பணம் செலுத்தி பெற்று நாங்கள் தன்மானத்தோடு வாழ வழிவகை செய்திட வேண்டும் என முதலமைச்சரான உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

எனக்கு இந்த இலவச பொருட்கள் வேண்டாம். வேண்டியது எனது உரிமையான அரசிசுப்பணி. நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad