மாணவர்களுக்கு நிதி உதவி: மத்திய அரசு பதில் என்ன? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, March 23, 2022

மாணவர்களுக்கு நிதி உதவி: மத்திய அரசு பதில் என்ன?

தொழில்முறை கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் குறித்து மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், 2022-2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.36,895 கோடியும், உயர்கல்வித்துறைக்கு ரூ.5,568 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பட்ஜெட் தாக்கலின்போது உரையாற்றிய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அரசு பள்ளிகளில் 6 - 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் (பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். அம்மாணவிகள் பிற திட்டங்களில் உதவித்தொகை பெற்றிருந்தாலும், மாதம் ரூ.1000 வழங்கப்படும் எனவும் அறிவித்தார். இந்த திட்டத்துக்கு மாநிலம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு, சமீபத்தில் தமிழக அரசு உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கக்கூடிய புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதே போல் நாடு முழுவதும் தொழில்முறை படிப்புகளை மேற்கொள்ளக் கூடிய இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு உதவித்தொகை அல்லது நிதி உதவி வழங்கும் திட்டம் ஏதேனும் மத்திய அரசிடம் உள்ளதா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் நாராயணசாமி, மாநில அரசுகள் தங்கள் சொந்த ஸ்காலர்ஷிப் திட்டங்களை வைத்துள்ளதாகவும், ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் ஒவ்வொரு விதமான ஸ்காலர்ஷிப் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் மத்திய அரசை பொறுத்தவரை மத்திய அரசு வழங்கக்கூடிய நிதி உதவி ஸ்காலர்ஷிப் குறித்து பொதுவான கொள்கைகள் இருப்பதாகவும் மத்திய அமைச்சர் நாராயணசாமி விளக்கம் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad