முதல்வர் மருமகன் சபரீசன் கோரிக்கை... ஐகோர்ட்டின் முடிவு என்ன? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, March 7, 2022

முதல்வர் மருமகன் சபரீசன் கோரிக்கை... ஐகோர்ட்டின் முடிவு என்ன?

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் முன்னாள் துணை சபாநாயகர் தொடர்ந்த வழக்கில் இருந்து தனது பெயரை நீக்க கோரிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மருமகன் சபரீசன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள் உள்ளிட்ட பலரை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ பதிவு செய்து ஒரு கும்பல் மிரட்டி பணம் பறித்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக கல்லூரி மாணவியின் சகோதரர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறை பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு, சபரி ராஜன், வசந்த் குமார், சதீஷ் மணிவண்ணன் ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
பொள்ளாச்சியில் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவங்களில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் தொடர்பிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார். ஸ்டாலினின் இந்த பேச்சு சில தொலைக்காட்சி சேனல்கள், பிரபல வார இதழ்கள் சிலவற்றில் வெளியாகி இருந்தது.

இதனிடையே, பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்ந்து தன்னை தொடர்படுத்தி உண்மைக்கு புறம்பான தகவலை ஸ்டாலின் பேசிவருவதால் ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தன்னை பற்றி ஸ்டாலின் பேசுவதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டுமெனவும் மனுவில் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.

பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்துள்ள இந்த வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின், அவரது மருமகன் வி.சபரீசன், கலைஞர் தொலைக்காட்சி, நக்கீரன் ஆசிரியர் கோபால், ஜூனியர் விகடன் ஆசிரியர் அறிவழகன் உள்ளிட்டோரை எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது

இந்த நிலையில் இந்த வழக்கில் எதிர் மனுதாரர் இடத்தில் இருந்து சபரீசன் பெயரை நீக்க கோரி அவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் 'இந்த வழக்கிற்கும், எனக்கும் எந்த தொடர்பம் இல்லை. மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் என்பதாகக் என்னை இந்த வழக்கில் சேர்த்துள்ளதாகவும். சம்மந்தப்பட்ட செய்தி நிறுவனத்தில் எந்த வகையிலும் தான் தொடர்புடையவன் இல்லை. எனவே எனது பெயரை நீக்க வேண்டும்' என அவர் கோரினார்.

இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் எந்த தொடர்பும் இல்லாத சபரீசன் பெயரை நீக்க வேண்டும் என அவரது தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கோரிக்கை வைத்தார்.

ஆனால் இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, நஷ்ட ஈடு தொடர்பான வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை கடந்த 2020 ஆம் ஆண்டு தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது பெயரை மட்டும் நீக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை ஏற்க முடியாது என தெரிவித்து சபரீசன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி வழக்கை 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad