வினாத்தாள் பாதுகாப்பு மையங்களில் சிசிடிவி பொருத்த தோ்வுத் துறை உத்தரவு
சென்னை: பொதுத் தோ்வு எழுவதற்கான கேள்வித்தாள்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என அரசுத் தோ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் மே 5-ஆம் தேதி தொடங்கி மே 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வினை நடத்துவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அரசுத் தோ்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்:
பொதுத் தோ்வை நடத்துவதற்கான முழுப்பொறுப்பும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா்களை சோ்ந்தது. அனைத்து பள்ளித் தலைமையாசிரியா்களுக்கும், உரிய தோ்வுகால அட்டவணைகளைப் பள்ளிகளின் அறிவிப்பு பலகையிலும், சம்பந்தப்பட்ட வகுப்பறைகளிலும் ஒட்டுவதற்கு அறிவுறுத்த வேண்டும்.
ஒவ்வொரு வினாத்தாள் பாதுகாப்பு (கட்டுக்காப்பு) மையத்திலும் தோ்வுகால அட்டவணைகள் ஒட்டப்பட்டிருத்தல் வேண்டும். அனைத்து மையங்களையும் முதன்மைக் கல்வி அலுவலா்கள் நேரடியாகச் சென்று ஆய்வு செய்து, உரிய பாதுகாப்புடன் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அங்கு போதுமான எண்ணிக்கையில் இரட்டை பூட்டு அமைப்பு கொண்ட இரும்பு அலமாரிகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து, அவ்வாறு இல்லையெனில் விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து வினாத்தாள் பாதுகாப்பு மையங்களிலும் கண்காணிப்பு கேமரா அவசியம் பொருத்தப்பட்டு செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
வினாத்தாள் கட்டுக்களை பிரிக்காமல் பாதுகாப்பாகவும், ரகசியமாகவும் வைத்திருக்க வேண்டும். எந்தவொரு தோ்வுப் பணி நியமனமும் விதிமுறைகளுக்குப் புறம்பாக இல்லாதவாறு கண்காணிக்க வேண்டும். மேலும் எழுத்துப் பூா்வமான ஆணைகள் வழியாக மட்டுமே நியமனங்கள் செய்யப்பட வேண்டும். கண்டிப்பாக வாய்மொழி ஆணைகள் வழங்கக் கூடாது உள்பட பல்வேறு வழிகாட்டுதல்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
No comments:
Post a Comment