கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அரசு பஸ் தலைகீழாக கவிழ்ந்து விபத்துள்ளானது.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி நேற்று இரவு அரசு பஸ் புறப்பட்டு வந்துகொண்டு இருந்தது. இந்த பஸ் சிதம்பரம் புறவழிச்சாலையில் வந்தபோது எதிரில் வந்த கார் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பஸ்சை திடீரென திருப்பினார்.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து அருகில் இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் பஸ்சின் டிரைவர் நன்னிலம் பகுதியை சேர்ந்த மனோகரன், நடத்துனர் திருநன்றியூர் பகுதியை சேர்ந்த ராமதாஸ் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.
மேலும் இந்த பேருந்தில் பயணம் செய்த கலியபெருமாள் (57), கலா (35), முருகவேல் (38) மற்றும் காளியப்பன் (52) ஆகிய 4 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதனால் மற்ற பயணிகள் அலறி துடித்தனர்.
இந்த விபத்தை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தில் வசிக்கும் பொதுமக்கள் ஓடி வந்து பேருந்துக்குள் சிக்கி இருந்த அனைவரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அண்ணாமலைநகரில் அமைந்துள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து, தகவலறிந்து அண்ணாமலைநகர் போலீசார் மற்றும் சிதம்பரம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இதன் பின்னர் இந்த சம்பவம் குறித்து பயணிகளிடம் போலீசார் கேட்டறிந்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment