ரேஷன் அட்டைக்கு 2000 ரூ: அரசு இதையும் செய்யணும் - சூப்பர் கோரிக்கை!
தீவிர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. ஆனால் சென்னை போன்ற பெருநகரங்களில் பாதிப்பு குறைந்த நிலையில் கிராமப் புறங்களில் தொற்று அதிகரித்து வருகிறது.
இதனால் பாதிப்பை மேலும் கட்டுப்படுத்த தீவிர ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்களான காய்கறி, மளிகைப் பொருள்கள் வாகனம் மூலம் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்கறிக் கடைகளில் மக்கள் கூடுவதைத் தவிர்க்கவே இந்த முறை கொண்டு வரப்படுகிறது. ஆனால் கொரோனா நிவாரண நிதி, நிவாரணப் பொருள்கள் ஆகியவற்றை ரேஷன் கடைகளுக்குச் சென்று வாங்க வேண்டிய நிலை உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு கடைக்கு 200 அட்டைகளுக்கு மட்டுமே இவை கொடுக்கப்படும் என்றாலும் மக்கள் வரிசையில் முண்டியடித்து நிற்பதால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.
வீடுகளுக்கு டோக்கன் கொடுக்க வருபவர்கள் நிவாரண நிதியையும் வழங்கலாம், மளிகைப் பொருள்கள் வாகனங்களில் விற்பனைக்கு வருவது போல் கொரோனா நிவாரணப் பொருள்களையும் வழங்கலாம் என மக்கள் கோரிக்கைவைத்து வருகின்றனர்.
அதே சமயம் ஒரு அட்டைக்கு 2000 ரூபாய் என ஒரு நாளுக்கு 200 அட்டைகளுக்கு வழங்குவதால் 4 லட்சம் ரூபாய் வரை கைகளில் வைத்திருக்க வேண்டியிருப்பதால் பாதுகாப்பு கருதி கடைகளில் வழங்குவதே வசதியானது என்கிறார்கள் சில ரேஷன்கடை ஊழியர்கள்.
கொரோனா பரவியதால்தான் நிவாரணம் எனும் போது, நிவராணம் வழங்குவதாலேயே மேலும் பரவிடக்கூடாது என்பதை மனதில் கொண்டு அரசு இதில் நல்ல முடிவெடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
No comments:
Post a Comment