ராணிப்பேட்டை எம்எல்ஏ காந்திக்கு அடித்தது ஜாக்பாட்... அறிவாலயம் அளித்துள்ள இன்ப அதிர்ச்சி!
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட திமுகவில் துரைமுருகனுக்கு அடுத்தபடியாக முக்கிய பிரமுகராக இருப்பவர் ராணிப்பேட்டை ஆர்.காந்தி. தி.மு.க மூத்த தலைவர்களுள் ஒருவரான ஆற்காடு வீராசாமி வழியில் அரசியலுக்குள் நுழைந்தவர்.
தி.மு.க.வில் "சாதனைச் செம்மல்" என அழைக்கப்படும் காந்தி 1996 சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் அடியெடுத்து வைத்தார். அதைத் தொடர்ந்து 2000 ஆண்டில் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக நியமித்தது திமுக தலைமை.
2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிட்ட காந்தி தோல்வியை தழுவினார். அதன் பின்னர் 2004ஆம் ஆண்டு மாவட்ட செயலாளர் பதவியும் சில காரணங்களால் பறிக்கப்பட்டது.
பதவி பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து வேறொரு மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட்டார். நியமிக்கப்பட்ட சில வருடங்களில் சட்டமன்ற தேர்தல் வருவதற்குள் புதிய மாவட்டச் செயலாளர் இறந்து போயுள்ளார்.
தேர்தல் சமயத்தில் மாவட்ட செயலாளர் பங்கு முக்கியம் என்பதால் மீண்டும் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டு 2006 சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது முறையாக ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பும் காந்திக்கு வழங்கப்பட்டது.
2006 சட்டமன்றத் தேர்தலில் பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்தது. அந்தத் தேர்தலில் காந்தி வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சட்டமன்றத்திற்கு சென்றார்.
2011 தேர்தலில் நான்காவது முறையாக களமிறங்கிய காந்தி தோல்வியை தழுவினார். 2011-இல் அதிமுக ஆட்சி அமைந்தது. 2016 தேர்தலிலும் அதிமுக ஆட்சி நீடித்தது. 2016 தேர்தலிலும் போட்டியிட்ட காந்தி வெற்றி பெற்றார். அதாவது இவரது தேர்தல் பயணங்கள் ஒரு முறை வெற்றி ஒரு முறை தோல்வி என 1996 முதல் 2016 வரை மாறிமாறி அமைந்துள்ளது.
ஆனால் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆறாவது முறையாக போட்டியிட்ட காந்தி மீண்டும் வெற்றிக்கனியை பறித்திருக்கிறார். திமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது.
அமைச்சரவை பட்டியல் திமுக தலைமையில் மும்முரமாக தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் துரைமுருகனுக்கு அடுத்தபடியாக அதிகாரம் மிக்கவராக உள்ள காந்திக்கு இந்த முறை அமைச்சர் பதவி நிச்சயம் கிடைத்துவிடும் என காந்தியின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
அவர்களின் எதிர்பார்ப்புபடியே காந்தி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார் ராணிப்பேட்டை தொகுதி எம்எல்ஏவான தமக்கு அமைச்சர் பதவி என்ற ஜாக்பாட் அடித்திருப்பதால் காந்தி உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்.
No comments:
Post a Comment