தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: அதுவும் ஒரே வாரத்தில்!
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும் 2.07 கோடி அரிசி ரேஷன் கார்டுகளுக்கு கொரோனா நிவாரண நிதி தலா ரூ.4000 வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார். சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 4,000 கொரோனா நிவாரண தொகை கிடையாது. அதேநேரத்தில், தற்போது நடைமுறைக்கு வந்துள்ள 2,14,950 புதிய அரிசி குடும்ப அட்டைகளை பெற்றுள்ளவர்களுக்கு நிவாரணத் தொகை உண்டு. அதாவது, மே 2ஆம் தேதி வரை ஒப்புதல் அளிக்கப்பட்ட புதிய ரேஷன் கார்டுகளுக்கு மட்டும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், நிவாரணத் தொகையின் முதல் தவனை இம்மாதமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நிவாரணத் தொகைக்காக டோக்கன்கள் வழங்கப்பட்டு பொதுமக்களுக்கு ரேஷன் கடை வாயிலாக பணம் வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 96.4 சதவீத ரேஷன் கார்டு தாரர்களுக்கு முதல் தவனையாக தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு விட்டதாக தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது. அத்துடன், தளர்வுகளற்ற ஊரடங்கு காலத்தில் வருகிற 31ஆம் தேதி வரை ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் 12 மணி வரை இயங்கும் என்றும் அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ரேஷன் பொருட்களும், நிவாரணத் தொகையும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, வருகிற ஜுன் 3ஆம் தேதிக்கு முன்பாக கொரோனா நிவாரணத்தின் 2ஆம் தவணை ரூ.2 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அத்துடன், கோதுமை, உப்பு, ரவை, சர்க்கரை, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, புளி, மஞ்சள், கடுகு, மிளகாய் தூள், சோம்பு, குளியல் சோப்பு, துவைக்கும் சோப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பும் தமிழக அரசால் வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், கொரோனா நிவாரணம் இரண்டாவது தவனை, 13 நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கும் திட்டத்தையும் வருகிற ஜூன் மாதம் 3ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment