மஹாராஷ்டிராவில் 60 லட்சத்தை நெருங்கிய கொரோனா
மஹாராஷ்டிர மாநிலத்தில் இன்று புதிதாக 10 ஆயிரத்து 107 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 60 லட்சத்தை நெருங்கியது.
இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நாளிலிருந்து பாதிக்கப்பட்ட மாநிலங்கள் வரிசையில் மஹாராஷ்டிர மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. முதல் அலையை விட, கொரோனா இரண்டாவது அலை மஹாராஷ்டிர மாநிலத்தை கடுமையாக தாக்கி விட்டது.
முழு ஊரடங்கை மஹாராஷ்டிர மாநில அரசு அமல்படுத்தியதன் விளைவாக, தற்போது நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு சுமார் 70 ஆயிரம் என இருந்த நிலையில், தற்போது 10 ஆயிரமாக குறைந்துள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று நிலவரம் குறித்து, மஹாராஷ்டிர மாநில அரசு வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மாநிலத்தில் இன்று ஒரே நாளில், 10 ஆயிரத்து 107 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 59 லட்சத்து 34 ஆயிரத்து 880 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் மும்பையில், மேலும் 821 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மாநிலம் முழுவதும் 237 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரத்து 390 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 10 ஆயிரத்து 567 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
No comments:
Post a Comment