மஹாராஷ்டிராவில் முதலமைச்சர் மாற்றம்? அஜித் பவார் பதில்
முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் தொடர்ந்து பணியாற்றுவோம் என, மஹாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில், அண்மையில் கட்சித் தொண்டர்களிடம் பேசிய மஹாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் நானா பட்டோல், எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில், காங்கிரஸ் கட்சித் தனித்து போட்டியிடும் என்றும், கட்சித் தொண்டர்கள் விருப்பப்பட்டால், முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடுவேன் என்றும் தெரிவித்தார்.
சிவசேனா கட்சித் தலைவரும், முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே தலைமையில், ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் பதவி ஆசையை காங்கிரஸ் கட்சித் தலைவர் நானா பட்டோல் வெளிப்படுத்தியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மும்பையில் இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஹாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் பதிலளித்ததாவது:
தற்போது வரை மாநிலத்தில் ஒரே வழிமுறையைத் தான் அனைவரும் பின்பற்றி வருகிறோம். முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் அனைவரும் இணைந்து செயல்படுவோம். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் நானா பட்டோல் வெளிப்படுத்தியது அவரது ஆசை. யாருக்கு வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கலாம். ஆனால், சட்டப்பேரவையில் எந்தக் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதோ அந்த கட்சியைச் சேர்ந்தவரே முதலமைச்சராக முடியும். உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது அந்தந்த கட்சிகள் விருப்பம்.
No comments:
Post a Comment