டெல்லிக்கே ஆட்டம் காட்டும் ஓபிஎஸ்; பின்னணியில் இப்படியொரு மாஸ் பிளானா?
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையிலான மோதல் போக்கு தொடர் கதையாகவே இருக்கிறது. இருப்பினும் பன்னீர்செல்வத்தை ஏதேனும் ஒருவழியில் சமாதானம் செய்வதை பழனிசாமி வாடிக்கையாக கொண்டிருக்கிறார். முன்னதாக தேர்தல் தோல்விகளால் துவண்டு போயிருந்தாலும், எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறுவதில் பழனிசாமி உறுதியாக இருந்தார்.
எப்போது நான் நம்பர் 2-வாக இருக்க முடியாது என்று பன்னீர்செல்வம் அதிரடி காட்டினார். இறுதியில் ஆதரவு வட்டம் பழனிசாமி பக்கம் சாய, அவரே எதிர்க்கட்சி தலைவராக மாறினார். இதன்மூலம் மீண்டும் அமைச்சர் அந்தஸ்து அவருக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியெல்லாம் வேண்டாம் என்று விடாப்பிடியாக இருந்த பன்னீர்செல்வத்தை இழுத்து வந்து சமாதானம் செய்து ஒருவழியாக அந்த பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார் பழனிசாமி.
இதற்கிடையில் இருவருக்கும் இடையிலான அறிக்கை போர் அதிமுகவிற்குள் தொடர்ந்து சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. வழக்கமாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் இணைந்து தான் அறிக்கை வெளியிடுவர். ஆனால் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தனியாக அறிக்கை வெளியிட்டு வருகிறார்.
இது கட்சிக்குள் நிலவும் உட்கட்சி பூசலை, அதிகார மோதலை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்நிலையில் பன்னீர்செல்வம் சமீப காலமாக வெளியிட்டு வரும் அறிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அதாவது, நீட் தேர்வு ரத்து, பெட்ரோலை ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட அறிக்கைகள் மத்திய அரசு தொடர்பானவை. தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கும் வகையில் அறிக்கைகள் இருந்தாலும், மத்திய அரசை சீண்டிப் பார்க்கிறாரா ஓபிஎஸ்? என்ற கேள்வி எழுகிறது.
இந்த விஷயத்தின் பின்னணி குறித்து விசாரிக்கையில், சில முக்கிய விஷயங்களை பாஜக மேலிடத்திற்கு தெரியப்படுத்தும் வகையிலேயே பன்னீர்செல்வம் இவ்வாறு நடந்து கொள்கிறார் எனக் கூறுகின்றனர். கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்த போது ஒற்றை ஆளாக எம்.பியாக வென்று காட்டியவர் ரவீந்திரநாத். இதற்காக இவரது தந்தை ஓ.பன்னீர்செல்வம் மிகவும் கடுமையான உழைப்பை செலுத்தியிருக்கிறார்.
No comments:
Post a Comment