முதல்வர் மம்தாவுக்கு ரூ.5 லட்சம் அபராதம் - உயர்நீதிமன்றம் அதிரடி
நீதித் துறையை அவமானப்படுத்த முயற்சிப்பதாகக் கூறி, மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேற்கு வங்க மாநிலத்தில், அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றிப் பெற்றது. எனினும், அக்கட்சித் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான
மம்தா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில், பா.ஜ.க.,வின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில், நந்திகிராம் தொகுதியில், பா.ஜ.க.,வின் சுவேந்து அதிகாரியின் வெற்றியை எதிர்த்து, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு, நீதிபதி கவுசிக் சந்தா முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரிக்கும் நீதிபதி கவுசிக் சந்தாவுக்கு, பா.ஜ.க., தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதனால், வழக்கு விசாரணை ஒருதலைபட்சமாக இருக்கும். வெளிப்படைத்தன்மையுடன் இருக்காது. எனவே நீதிபதியை மாற்ற வேண்டும் எனக்கூறி, கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, முதலமைச்சர் மம்தா பானர்ஜி அண்மையில் கடிதம் எழுதியிருந்தார்.
இதனையடுத்து இந்த வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்த நீதிபதி கவுசிக் சந்தா, நீதித் துறையை அவமானப்படுத்த திட்டமிட்டு மம்தா பானர்ஜி நடவடிக்கை எடுத்துள்ளார். அவரது செயல்கள், அரசியல் சாசனத்தில் தெரிவிக்கப்பட்ட கடமையில் இருந்து மீறியதாக கூறியதுடன், அவருக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்களின் குடும்பத்திற்கு இந்த தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment