காவிரி – வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்தை எதிர்ப்பதா? - ஓ.பி.எஸ்., கண்டனம்!
காவிரி - வைகை -குண்டாறு இணைப்புத் திட்டம் உள்ளிட்ட நீர்ப்பாசன திட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பது கண்டனத்திற்குரியது என்று அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பிற்கு முற்றிலும் எதிரான வகையிலும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கை முற்றிலும் புறக்கணிக்கும் வகையிலும், மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்ததற்கு தமிழகத்தின் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம் உள்ளிட்ட தமிழகத்திற்குள் நிறைவேற்றப்பட உள்ள நீர்ப்பாசன திட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது. கர்நாடக அரசின் இந்த செயல் கடும் கண்டனத்திற்குரியது.
வெள்ளப் பெருக்கின் போது காவிரி கொள்ளிடம் ஆறுகளில் இருந்து கடலில் கலக்கும் உபரி நீரை திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை ,விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் கரூர் மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் குடிநீர்த் தேவைக்கும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுவதற்கும் திருப்பி விட ஏதுவாக, நீண்ட நாள் கனவு திட்டமான, காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம் தீட்டப்பட்டு, 14 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தின் முதற்கட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது.
இந்த சூழ்நிலையில் மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா பகுதி பாலைவனம் ஆகிவிடும் என்பதால் அந்த திட்டத்திற்கு தமிழகம் ஒப்புதல் தரவில்லை என்பதற்காக வேண்டும் என்று தங்களது தொடர்பில்லாத தமிழகத்தில் நிறைவேற்றப்பட இருக்கும் நீர்ப்பாசன திட்டங்களுக்கு தடை கேட்டு கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது நியாயமற்ற செயல்.
சென்னை மாகாணத்திற்கும், மைசூர் மாகாணத்திற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி சென்னை மாகாண அரசின் அனுமதியின்றி மைசூர் மாகாண அரசு காவிரி நீரைத் தடுக்கும் வகையில் அணைகளை கட்ட கூடாது என்பது தான். இதற்கு காரணம் காவிரி ஆற்றின் மேல் படுகையில் அமைந்துள்ள
கர்நாடக மாநிலம் அணைகளை கட்டினால் காவிரி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள தமிழகத்திற்கு வரும் தண்ணீர் தடைபடும் என்பதால் தான்.
தமிழகத்தின் அனுமதி பெறாமல் அணை கட்டக்கூடாது என்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பையும் மீறி மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிக்கும் போது அதனை தமிழகம் எதிர்க்கிறது. இதற்கு காரணம் புதிய அணைகளை கட்டும்போது தமிழகத்திற்கு வருகின்ற நீரின் அளவு வெகுவாக குறையும்.
அதே சமயத்தில் காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம், மேட்டூர் சரபங்கா நீரேற்று திட்டம், கடலூர் நாகப்பட்டினம், கரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தவணைகள் கட்டும் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவதன் காரணமாக தமிழகத்தில் வீணாக கடலில் கலக்கும் உபரி நீர் ,தமிழ் நாட்டின் பிற பகுதிகளுக்கு திருப்பி விடப்படும்.
No comments:
Post a Comment