நீங்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்; தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 1,235 மருந்தாளுநர்கள் உள்ளிட்ட 4,624 துணை மருத்துவப் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் 5,000 மருந்தாளுநர் பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு மருந்தியலில் பட்டப்படிப்பு (பி.பார்ம்), பட்டயப்படிப்பு (டி.பார்ம்) படித்தவர்கள் தகுதி பெற்றவர்கள்.
பி.பார்ம் படித்தவர்களுக்கு மறுப்பு
டி.பார்ம் படித்தவர்களுடன் ஒப்பிடும் போது பி.பார்ம் படித்தவர்களுக்கு மருந்துகள் குறித்து கூடுதல் புலமை இருக்கும். ஆனால் தமிழகத்தில் இன்று வரை பி.பார்ம் படித்தவர்களுக்கு அரசு மருத்துவ நிறுவனங்களில் மருந்தாளுநர் பணி மறுக்கப்பட்டு வருகிறது. அதாவது பி.பார்ம் படித்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் கூடுதலான வேலைவாய்ப்புகள் இருப்பதால் அவர்களுக்கு மருந்தாளுநர் பணி வழங்கத் தேவையில்லை.
இருதரப்பினரும் பயனடைய வேண்டும்
டி.பார்ம் படித்தவர்களுக்கு வேறு வேலைவாய்ப்புகள் இல்லை என்பதால் அவர்களுக்கு மட்டுமே இப்பணி வழங்கப்பட வேண்டும் என்பது தான் அரசின் வாதமாகும். இது அடிப்படையும், அறமும் அற்றது. மருந்தாளுநர் பணி நியமனத்தில் டி.பார்ம் பட்டதாரிகள், பி.பார்ம் பட்டதாரிகள் ஆகிய இரு தரப்பினரின் நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.
அன்புமணி ராமதாஸ் வரவேற்பு
அதனைக் கருத்தில் கொண்டு இரு தரப்பினரும் விண்ணப்பித்து தகுதி அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும் வகையில் புதிய திட்டத்தை தயாரித்து அரசு செயல்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இந்த சூழலில் அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுனர் பணிக்கு பி.பார்ம் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment