குடியரசுத் தலைவருக்கு ஸ்டாலின் அளித்த பரிசு: மதுரைக் காரங்களுக்கு மகிழ்வான செய்தி!
தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த நிலையில், இரண்டாவது முறையாக நேற்று மீண்டும் டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து இன்று பேசினார்.
சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ளவும், சட்டமன்றத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப் படத்தை திறந்துவைக்கவும் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், மதுரையில் கலைஞர் பெயரில் அமையவிருக்கும் நூலகம், சென்னை கிண்டியில் அமையவிருக்கும் அரசு மருத்துவமனை, இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை எட்டியதை நினைவுகூரும் வகையில் கடற்கரைச் சாலையில் அமையவிருக்கும் நினைவுத்தூண் ஆகியவற்றின் அடிக்கல் நாட்டு நிகழ்வுகளிலும் பங்கேற்க குடியரசுத் தலைவருக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
குடியரசுத் தலைவருடனான சந்திப்பின்போது, மதுரையைப் பற்றி மனோகர் தேவதாஸின் நூலான 'தி மல்டிபிள் ஃபேக்ட்ஸ் ஆஃப் மை மதுரை' (Multiple Facets of My Madurai) என்ற நூலினை அவருக்கு ஸ்டாலின் பரிசளித்தார். மதுரையைப் பற்றிய தகவல்கள் அழகிய ஓவியங்களுடன் இந்த நூலில் இடம்பெற்றிருப்பது தனிச்சிறப்பு.
எழுத்தாளரும், ஓவியருமான மனோகர் தேவதாஸ், 1936ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் இவருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. “மாமதுரையின் அழகை மனோவின் ஓவியத்தின் வழியே காண்பது பேரனுபவம். மதுரைக்காரனான எனக்கு இதைவிட மகிழ்வான செய்தி என்ன இருக்க முடியும்” என்று இப்புத்தகத்தை ஸ்டாலின் பரிசளித்தது குறித்து மதுரை எம்.பி.யும், எழுத்தாளருமான சு.வெங்கடேசன் நெகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment