சேலம் பாரத பிரதமர் வீடு திட்டம்: கோடிக் கணக்கில் பொறியாளர்கள் கையாடல்!
தமிழ்நாட்டில் மத்திய அரசு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 2 லட்சத்து10 ஆயிரம் ரூபாய் முழு மானியமாகத் தவணை முறையில் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் வீடு கட்டும் பணிகள் குறித்து பொறியாளர்களைக் கொண்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்ததாகக் குடிசை மாற்று வாரிய பொறியாளர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாகச் சேலத்தில் 2017-18ஆம் ஆண்டு வரையில் ஏற்கனவே கான்கிரீட் வீடு உள்ளவர்களுக்கும், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 14 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தாமாக முன்வந்து சேலம் மாவட்ட குடிசை மாற்று வாரிய செயற் பொறியாளர் ரவிக்குமார் ,உதவி செயற்பொறியாளர்ஜெயந்திமாலா, உதவிப் பொறியாளர்கள் சரவணன் மற்றும் சீனிவாசன் ஆகியோர் மீது 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அதிகாரிகளே மோசடியில் ஈடுபட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment