சவுதி அரேபியா - ஐக்கிய அரபு அமீரக சர்ச்சை: பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர வாய்ப்பு!
கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை மலை போல உயர்ந்து வருகிறது. பெட்ரோல் விலை ரூ.100க்கு விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், சவுதி அரேபியா - ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கிடையே நிலவி வரும் சர்ச்சை மேலும் அதிகமாகி வருவதால், அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. மாறாக அவை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக பெரிய அளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் பாதிப்பை சந்திக்கக் கூடும்.
எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் ஒபெக் பிளஸ் (OPEC+) கூட்டமைப்பின் உள் மோதல்களால் எண்ணெய் சந்தையில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டாம் என்ற தற்போதைய ஒப்பந்தத்தை 2022 ஆம் ஆண்டு வரை நீட்டிக்க சவுதி அரேபியா முன்மொழிந்துள்ளது. கச்சா எண்ணெயின் தேவை குறைவதால் சமநிலையை பராமரிக்க உற்பத்தியைக் குறைக்க முடிவு செய்யப்பட்டது. சந்தையை சமநிலையில் வைத்திருக்க 2022 ஏப்ரல் வரை ஒப்பந்தம் நீட்டிக்கப்பட வேண்டும் என்று சவுதி விரும்புகிறது. ஆனால், ஐக்கிய அரபு அமீரகம் இதற்கு உடன்பட வில்லை.
எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க வேண்டும் என்ற ஒபெக் மற்றும் பிற எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் முடிவை ஐக்கிய அரபு அமீரகம் எதிர்த்து வருகிறது. ஐக்கிய அரபு அமீரகம் தனது சொந்த விதிமுறைகளின் பேரில் இந்த ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்ல பிடிவாதமாக உள்ளது. தங்களது எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்காமல், ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் திட்டத்தை ஆதரிக்க முடியாது என ஐக்கிய அரபு அமீரகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment