டேனிஷ் சித்திக் உடலை ஜாமியா மில்லியா இஸ்லாமியா கல்லறையில் அடக்கம் செய்ய அனுமதி!
ஆப்கானிஸ்தான் மோதலின் போது கொல்லப்பட்ட ராய்ட்டர் நிறுவனத்தின் புகைப்பட நிபுணர் டேனிஷ் சித்திக்கின் உடல் டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான கல்லறையில் அடக்கம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ராய்ட்டர் நிறுவனத்தின் புகைப்பட நிபுணர் டேனிஷ் சித்திக், கொரோனா தொற்று மரணங்கள் குறித்து எடுத்த புகைப்படங்கள் சர்வதேச அளவில் பேசப்பட்டன. ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கும், தலிபான்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலை புகைப்படம் எடுக்கச் சென்ற சித்திக், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையருகே, காந்தகார் மாநிலம் ஸ்பின் போல்டாக் மாவட்டத்தில், கடந்த 16ம் தேதி கொல்லப்பட்டார். அவரது மரணம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியரான டேனிஷ் சித்திக், உலகின் பெருமைமிக்க புலிட்சர் விருது உள்ளிட்ட பல சிறப்புகளைப் பெற்றவர் ஆவார். இந்நிலையில் அவரது உடல் டெல்லி கொண்டு வரப்பட்டு ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான கல்லறையில் அடக்கம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
சித்திக் குடும்பத்துக்கும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்துக்கும் நீண்ட தொடர்புகள் உண்டு. சித்திக்கின் தந்தை முகமது அக்தர் சித்திக் ஜாமியா பல்கலைக் கழகத்தின் கல்வி பிரிவில் பேராசிரியராகப் பணியாற்றிவர். ஜாமியா நகரில் தான் அவர் தங்கியிருந்தார். சித்திக் ஜாமியா பள்ளியில் தான் படித்தார். ஜாமியா பல்கலைக்கழகத்தில் பொருளாதார இளநிலை பட்டமும், மாஸ் கம்யூனிகேஷனில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் அகமது அஜீம், துணைவேந்தர், சித்திக் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல சென்றிருந்தபோது, சித்திக்கின் உடலை பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான கல்லறையில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அவர்களின் வேண்டுகோள் ஏற்கப்பட்டுள்ளது," என்று கூறினார்.
No comments:
Post a Comment