அதிமுக: ஊடக விவாதங்களிலிருந்து ஒதுங்குவது முறையா?
தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி இருவரும் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். ஊடக விவாதங்களின் தன்மை குறித்து விமர்சித்துள்ள அவர்கள் இனி அதிமுக இந்த விவாதங்களில் பங்கேற்காது என்று கூறியிருக்கிறார்கள்.
மக்களின் அடிப்படைத் தேவைகள், தினசரி பிரச்சினைகள் பல இருக்கின்றபோது அதைப் பற்றியெல்லாம் சிறிதளவும் கவலைப்படாமல் ஜனநாயகத்தின் அங்கங்களாக இருக்கக்கூடிய ஊடக நிறுவனங்கள் அதிமுக புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும் சிறுமைப்படுத்தும் நோக்கிலும் மனம் போன போக்கில் ஊடக அறிக்கை தொடர்பாகவும், கட்சித் தலைவர்களுக்கு களங்கம் ஏற்படுகின்ற விதத்திலும் விவாத தலைப்புகளை வைத்து நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்துவது உள்ளபடியே மனதிற்கு வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது” என்பது அவர்களுடைய விமர்சனம்.
“மேற்சொன்ன காரணங்களால் ஊடக விவாதங்களில் அதிமுக சார்பில் கட்சி நிர்வாகிகளும் செய்தித் தொடர்பாளர் கட்சியை சார்ந்தவர் யாரும் இனி பங்கேற்க மாட்டார்கள் என்பதையும் எங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக் கொண்டு யாரையும் வைத்துப் பேசுவதை நிறுத்துமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். கட்சியின் பெயரை வேறு எந்த வகையிலும் பிரதிபலிக்கும்படி யாரையும் தங்கள் ஊடக வழியாக கருத்துக்களை தெரிவிக்க அழைக்கவும், அனுமதிக்க வேண்டாம் என்றும், வேறு யாரையும் அழைத்து அவர்களை அதிமுக என்று அடையாளப்படுத்த வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
புறக்கணிக்கும் உரிமை
விவாதங்களில் கலந்துகொள்ளும் உரிமையைப் போலவே கலந்துகொள்ளாமல் இருக்கும் உரிமையும் முக்கியமானதுதான். கருத்துச் சொல்லும் உரிமையைப் போலவே கருத்துச் சொல்லாமல் இருப்பதற்கான உரிமையும் ஒருவருக்கு வேண்டும்.
கருத்துச் சொல்லாமல் இருப்பதுகூட ஒரு கருத்துதான். 1991 முதல் 96 வரை பிரதமராக இருந்த நரசிம்ம ராவ் பல விஷயங்களில் மௌனத்தையே தன் செய்தியாகத் தருவார். பல பிரச்சினைகளில் முடிவெடுப்பதைத் தள்ளிப்போடுவார். முடிவெடுக்காமல் இருக்கிறார் என்னும் குற்றச்சாட்டு எழுந்தபோது அவர், “முடிவெடுக்காமல் இருப்பதும் ஒரு முடிவுதான்” என்று சொல்லி விமர்சகர்களின் வாயை அடைத்தார்.
ஊடகர்களின் கேள்விகளை எதிர்கொள்ளும் பிரபலங்கள் சில கேள்விகளுக்கு நோ கமெண்ட்ஸ் என்று பதில் சொல்வார்கள். கருத்து இல்லை என்று இதற்குப் பொருள் இல்லை. கருத்து சொல்ல விரும்பவில்லை என்று பொருள். ஒரு பிரச்சினையில் கருத்து சொல்ல விரும்பாமல் இருப்பதும் ஒரு கருத்துதான். தயக்கம், கசப்பு, அச்சம், பிரச்சினை தவிர்த்தல் எனப் பல விதங்களில் புரிந்துகொள்ளக்கூடிய கருத்து இது.
No comments:
Post a Comment