எம்.பி., சு.வெங்கடேசன் கேள்வி - மதுரை மாநகராட்சி விளக்கம்!
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தின் மதுரை பயணத்தை முன்னிட்டு சாலைகளை சீரமைக்க மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளர் வெளியிட்ட சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்ப, அதற்கு மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.
மதுரையில் உள்ள சாய்பாபா கோவில் நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் வரும் 26ம் தேதி பங்கேற்க உள்ளார். அவரது வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையத்திலிருந்து நிகழ்ச்சிகள் நடைபெறும் வழித்தடங்கள் வரை சாலைகளை சீரமைப்பது தொடர்பாக மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளர் சண்முகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.சாலைகளை சீரமைத்தல், தெரு விளக்குகளை பராமரித்தல், சாலைகளை சுத்தமாக வைத்தல் போன்ற பணிகளை செய்ய அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த சுற்றறிக்கை குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கேடசன் தமது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அரசின் எந்த விதிகளின்படி இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறித்து மதுரை மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், மதுரை மாநகராட்சி ஆணையர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் பிரமுகர்கள் பயணம் செய்யும்போது, அது தொடர்பான விதிகளின்படி பாதுகாப்பு காரணங்களுக்காக வழக்கமாக சில முன்னேற்பாடுகள் செய்யப்படும். அதன் அடிப்படையில் மட்டுமே விதிமுறைகளின்படியான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சிறப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. வழக்கமான நிர்வாக நடைமுறைகளின் படி உயர் அலுவலர்கள் அனுமதி பெறாமல், தன்னிச்சையாக தவறுதலாக புரிந்து கொள்ளும் வகையில் சுற்றறிக்கை வெளியிட்ட அலுவலரிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment