அதிமுகவிற்கு குட்பை; செஞ்சுரி அடிக்க தமிழக பாஜகவின் புது வியூகம்!
தமிழகத்தில் ’தாமரை மலர்ந்தே தீரும்’ என்ற கோஷம் தமிழிசை சவுந்திரராஜன் பதவிக்காலத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. இதையடுத்து எல்.முருகன் தலைமையில் சட்டமன்றத்திற்குள் பாஜக மீண்டும் காலடி எடுத்து வைக்கும் சூழல் உருவானது. இந்நிலையில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தலைமையில் தமிழக பாஜகவை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல டெல்லி தலைமை திட்டமிட்டுள்ளது.
இதற்காக வரும் உள்ளாட்சி தேர்தல் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. அதாவது, செப்டம்பர் மாதம் ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலும், டிசம்பரில் அனைத்து மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலும் நடைபெறவுள்ளன. இதில் ஒரு மேயர், 10 நகராட்சி தலைவர்கள், 100 வார்டு கவுன்சிலர் பதவிகளை பிடிக்க பாஜக சார்பில் வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுவும் அதிமுகவை கைகழுவி விட்டு தனித்து போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. மக்களவை தேர்தல், உள்ளாட்சி தேர்தல், தமிழக சட்டமன்ற தேர்தல் என அதிமுக - பாஜக கூட்டணி தொடர்ந்து வருகிறது. கடைசியாக நடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் அதிமுக ஆட்சியை இழந்தது. இதற்கு பாஜக உடன் வைத்த கூட்டணி தான் காரணம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த விஷயத்தில் பாஜக மூத்த தலைவர்கள் மிகுந்த கோபமடைந்தனர். உங்களால் தான் எங்களுக்கு தோல்வி என்று சிலர் பதிலடி கொடுத்தனர். இப்படி ஒருவர் மீது ஒருவர் பலி போடுவது டெல்லி தலைமைக்கு அதிர்ச்சியை அளித்தது. இதன் விளைவாக மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிமுக கைகழுவி விடப்பட்டது. இதேபோல் வரும் உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவை கழட்டி விட வியூகம் வகுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் அதிமுகவிற்கு தான் லாபம் என்று சொல்லப்பட்டாலும், பாஜகவின் கணக்கு வேறாக இருக்கிறது. அதாவது பல்வேறு வழிகளில் தங்களுக்கு லாபம் என்கின்றனர் பாஜகவினர். தனித்து போட்டியிடுவதால் பாஜக சார்பில் போட்டியிட பலருக்கு வாய்ப்பு கிடைக்கும். அதில் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர்களாக விளங்குபவர்கள் வெற்றி பெறவும் வாய்ப்புண்டு.
பாஜகவின் சின்னமான தாமரையை பட்டி தொட்டியெங்கும் விளம்பரப்படுத்த தீவிர முயற்சி எடுக்கலாம். இரட்டை இலையுடன் தாமரையை சேர்த்து விளம்பரப்படுத்துவது அதிமுகவிற்கே சாதகமாக முடிகிறது. எனவே தாமாரையை தனித்து விளம்பரம் செய்து செல்வாக்கு பெற்ற சின்னமாக, கிராமங்களில் பலம் வாய்ந்த கட்சியாக வளர்த்தெடுக்க முடியும்.
No comments:
Post a Comment