இந்தியக் கடல்சார் மீன்வள மசோதா: மோடிக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்
மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்தியக் கடல்சார் மீன்வள மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு நேற்று எழுதிய கடிதத்தில், “தமிழகத்தில் உள்ள முக்கிய பிரச்னைகளில் குறிப்பாக கடல் சார்ந்த மாவட்டங்களில் உள்ள பிரச்னைகளை தங்களின் கவனத்திற்கு கொடுவர விளைகிறேன். நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது ஒன்றிய அரசு இந்தியக் கடல்சார் மீன்வள மசோதா 2021ஐ கொண்டுவர உத்தேசித்துள்ளது. இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள், கடலோர மீனவர் சமூகங்களின் நலன்களுக்கு எதிராக உள்ளது. இந்திய அரசியலமைப்பின் 7ஆவது அட்டவணையின் மாநிலப் பட்டியலின் கீழ் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை மீறும் சில உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது.
ஒன்றிய அரசு இந்த மசோதா மீது இந்திய மீனவர்களின் கருத்துக்கேட்பு இல்லாமல் கொண்டுவர உள்ளது. ஒன்றிய அரசால் முன்மொழியப்பட்டுள்ள மசோதாவில் உள்ள சில பிரிவுகளில், மீனவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்துதல், சிறையில் அடைத்தல், மீனவர்களுக்கு எதிராக வலிய நடவடிக்கைகளை எடுத்தல், கட்டணங்களை விதிப்பது, பெரும் அபராதங்களை விதிப்பது போன்ற மீனவர்களுக்கு எதிரான உட்பிரிவுகள் இருப்பதால், இது பரவலாக எதிர்ப்புக்களையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தியுள்ளதால் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அனைத்துத் தரப்பு மக்களுடன் விவாதம் மற்றும் ஆலோசனைகள் நடத்தியபிறகு, அவர்களின் கருத்துகளைப் பெற்று, மீனவர் நலன் காக்கும் வகையிலும், கடல் வளத்தைக் காக்கும் வகையிலும், புதியதொரு மசோதாவை நாடாளுமன்றத்தில் பின்னர் தாக்கல் செய்யலாம். தற்போது உத்தேசிக்கப்பட்டுள்ள இந்தியக் கடல்சார் மீனவர் மசோதா 2021ஐ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் முயற்சியினை தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment