விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்கள்: தமிழக அரசுக்கு ஓபிஎஸ் அவசர கோரிக்கை
தமிழக விவசாயிகளின் வேளாண் நிலங்கள் பாதிக்காத வகையில் நெடுஞ்சாலைகளின் ஓரமாகப் பதிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, '' மக்களுக்காக இயற்றப்படும் சட்டங்கள் மற்றும் வகுக்கப்படும் திட்டங்களால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில், கண்ணும் கருத்துமாக இருந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அதனால்தான் மண்ணைவிட்டு மறைந்தாலும் மக்களின் மனங்களில் நிறைந்திருக்கிறார்.
கேரள மாநிலம், கொச்சி திரவ எரிவாயு முனையத்திலிருந்து பெங்களூரு வரை, தமிழகத்தின் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்களின் விவசாய நிலங்களின் ஊடே 310 கி.மீ. தூரத்துக்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்கள் அமைக்கும் பணியினை மேற்கொள்ள கெயில் நிறுவனம் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்தத் திட்டம் விவசாயிகளின் விருப்பத்துக்கு மாறாகச் செயல்படுத்தப்படுகிறது என்பதன் அடிப்படையிலும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, விவசாயிகளின் கருத்துகளைக் கேட்டறிய உத்தரவிட்டார். அதன்படி, பொதுக் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் 06-03-2013, 07-03-2013 மற்றும் 08-03-2013 ஆகிய நாட்களில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் அண்ணா மேலாண்மை நிலையக் கூட்டரங்கத்தில் நடைபெற்றது. இந்தப் பொதுக் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் மேற்குறிப்பிடப்பட்ட ஏழு மாவட்டங்களில் 134 கிராமங்களைச் சார்ந்த 2,428 விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment