அடுத்த கட்ட ஊரடங்கு: பள்ளிகள், திரையரங்குகளுக்கு அனுமதியா? ஸ்டாலின் ஆலோசனை!
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அமலில் உள்ள ஊரடங்கு ஜூலை 19ஆம் தேதி காலை வரை அமலில் இருக்கும். இந்நிலையில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், வருவாய்த் துறை, பொதுத் துறை அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பு 36ஆயிரம் என்ற அளவில் இருந்த நிலையில் தற்போது 2400 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. இதே வேகத்தில் குறைந்தால் மாத இறுதிக்குள் 1000க்குள் பாதிப்பு அளவு சென்றுவிடும் என கூறப்படுகிறது. பாதிப்பு குறைவதால் கட்டுப்பாடுகளை தளர்த்த கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.
குறிப்பிட்ட சில பணிகளுக்கு மட்டுமே தடைகள் தொடரும் நிலையில் பெரும்பாலான நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்பட்டுவருகின்றன. பள்ளிகள், கல்லூரிகள், மதுபானக் கூடங்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள் உள்ளிட்டவற்றுக்கு தடை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் இந்த கூட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளை அடுத்த மாதம் முதல் திறக்க ஆலோசனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து கல்லூரிகளை திறக்க அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. பள்ளிகளில் 10, 11, 12 ஆகிய உயர் வகுப்பினருக்கும் நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என்கிறார்கள்.
படப்பிடிப்புகளை நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ள போது திரையரங்குகளை திறக்காமல் திரைத்துறையை மீட்டெடுக்க முடியாது என முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே 50 சதவீதம் பார்வையாளர்களுடன் கட்டுப்பாடுகளை பின்பற்றி திரையரங்குகள் இயங்க அனுமதியளிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.
No comments:
Post a Comment