தனியார் பள்ளிகளில் முழு கட்டணம் செலுத்த தேவையில்லை - பள்ளிக்கல்வித்துறை அதிரடி
தனியார் பள்ளிகளில் இரண்டு தவணையாக 75 சதவீதம் மட்டும் கல்வி கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், '' தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஏப்ரல் 24 தேதி முதல் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன. அதனைத் தொடர்ந்து 2021-22ம் கல்வியாண்டிற்கான நேரடி வகுப்புகள் இன்றும் தொடங்கப்படவில்லை. ஆனால் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளில் கட்டணங்கள் வசூல் செய்யப்படுகின்றன என புகார்கள் வருகின்றன.
தற்போது நிலவி வரும் கொரோனா பெருந்தொற்றை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 75 சதவீதம் மட்டும் கல்வி கட்டணம் வசூல் செய்ய வேண்டும். முதல் தவணையில் 40 சதவீதம் கட்டணத்தை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் வசூல் செய்யலாம். மீதமுள்ள 35 சதவீதம் கட்டணத்தை நேரடி வகுப்புகள் துவங்கியப் பின்னர் 2 மாதங்களில் வசூல் செய்யலாம். மீதமுள்ள 25 சதவீதம் கட்டணங்களை வசூல் செய்வது குறித்து கொரோனா பெருந்தொற்றின் நிலையை பொருத்து அறிவிக்கப்படும்'' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா சூழலை மனதில்கொண்டு தனியார் பள்ளிகளில் அதிகளவு கட்டணம் வசூலிக்க கூடாது என்று ஏற்கனவே அரசு எச்சரித்துள்ளது. இருப்பினும், சில பள்ளிகளில் முழு கட்டணத்தையும் உடனே செலுத்துமாறு பெற்றோர்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர். பல பெற்றோர்கள், இதனை வெளியில் சொல்லமால் விட்டு விடுவதாக அரசுக்கு தகவல் வந்துள்ளன. இந்நிலையில், மீண்டும் ஒருமுறை தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கட்டண அளவை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment