அரசு ஊழியர்களுக்கு ஸ்டாலின் கொடுக்கும் செம ஷாக்?
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அதை நிறைவேற்றித் தருவதில் திமுக அரசு எப்போதும் முன்னிலையில் நிற்கும் என்ற பேச்சு உண்டு.
அந்த வகையில் அதிமுக அரசு ரத்து செய்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான பணிகளை
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மேற்கொண்டுவருவதாக கூறப்படுகிறது. இது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் மற்றொரு அறிவிப்பும் வெளியாக உள்ளதாக கூறுகிறார்கள்.
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58ஆக இருந்தது. கடந்த ஆண்டு கொரோனா பொது முடக்கத்தில் இருந்த சமயம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு ஓய்வு பெறும் வயதை 59 ஆக அதிகரித்தது. ஓய்வுபெறும் போது அரசு ஊழியர்களுக்கு செட்டில்மெண்ட் தொகை வழங்கப்பட வேண்டும். அந்த ஆண்டில் ஓய்வு பெறும் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு அதை வழங்க போதிய நிதி இல்லாத காரணத்தால் ஓய்வுபெறும் வயதையே ஓர் ஆண்டு நீட்டித்தது அதிமுக அரசு.
அதன் பின்னர் இந்த ஆண்டு தொடக்கத்திலும் எடப்பாடி பழனிசாமி அரசு ஓய்வுபெறும் வயதை மேலும் ஓர் ஆண்டு அதிகரித்தது. போதிய நிதி இல்லாததே இதற்கும் காரணமாக கூறப்படுகிறது.
ஓய்வு பெறும் வயதை இரு ஆண்டுகள் உயர்த்தியதால் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு தடை படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்த சூழலில் திமுக அரசு ஓய்வு பெறும் வயதை மீண்டும் 58ஆக குறைக்க முயற்சிகள் மேற்கொண்டுவருவதாக தகவல்கள் வருகின்றன. இந்த முறையும் போதிய நிதி இல்லை என்ற போதிலும் அதை சமாளிக்க புதிய யுத்தியை அரசு கையாள உள்ளதாக கூறுகிறார்கள். அதாவது செட்டில்மெண்ட் தொகையை பணமாக அல்லாமல், இரு ஆண்டுகள் கழித்து பெற்று கொள்ளும் வகையில் பாண்ட் பத்திரமாக கொடுக்கலாம் என்றும் விவாதிக்கப்பட்டு வருகிறதாம். இது குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கோட்டை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment