ஓர் அநீதியான தேர்வை இன்று 1.10 லட்சம் தமிழ் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள் - கமல்
இந்தியாவில் இளங்கலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நாடு முழுவதுமுள்ள 202 நகரங்களில் நடைபெறுகிறது. மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும். நாடு முழுவதும் 16 லட்சம் மாணவர்களும் தமிழகத்தில் 1.12 லட்சம் பேரும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
கொரோனா தடுப்பு நெறிமுறைகளில் தேர்வெழுத வரும் மாணவர்களுக்கு N95
மாஸ்க் வழங்கப்படுவதுடன் அனைத்து மாணவர்களும் சானிடைசர் பாட்டிலை கொண்டு வரவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறிவிட்டு ஆட்சிக்கு வந்துள்ள திமுக அரசை எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதற்கு மத்தியில் சேலம் மாவட்டம் கூழையூர் பகுதியை சேர்ந்த தனுஷ் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்கான பயிற்சி பெற்று கடந்த இரண்டுமுறை தேர்வில் தோல்வி அடைந்த நிலையில் இந்த முறை தேர்வெழுத்துவதற்கு முன்பே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மாநிலத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது.
மாணவன் தனுஷ் உடலுக்கு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர்
எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தியதோடு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று தமிழக மாணவர்கள் நீட் எழுதுவதை சுட்டிக்காட்டி ட்வீட் போட்டுள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன். அவரது பதிவில் ''ஓர் அநீதியான தேர்வை இன்று 1.10 லட்சம் தமிழ்க் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள். நீட் தேர்வை ரத்து செய்வோம் என மேடைகளில் முழங்கிய நம் அரசியலாளர்களைப் பற்றி இவர்களின் எண்ணம் என்னவாக இருக்கும்?!'' என இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment