பம்பர் டூ பம்பர் காப்பீடு 5 ஆண்டுகளுக்கு கட்டாயம்: வாபஸ் பெற்ற உயர் நீதிமன்றம்!
சாலை விபத்து மரணம் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்யநாதன், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து புதிய வாகனங்களுக்கும்
பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் வாகன உரிமையாளர், ஓட்டுநர், பயணி என அனைவரையும் உள்ளடக்கும் வகையில், ஐந்து ஆண்டுகளுக்கு காப்பீடு செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து போக்குவரத்துத் துறை சார்பிலும் அதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
இதனிடையே, இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (IRDAI) விநியோகஸ்தர்களாக மட்டுமே காப்பீடு நிறுவனம் செயல்படுவதால், ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் நிறுவனங்களால் சேவைகளில் எந்த மாற்றமும் செய்ய இயலாது உயர் நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த காப்பீட்டு நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. ஆனால், ஆணையத்தின் ஒப்புதல் பெற்று, உயர் நீதிமன்ற உத்தரவுக்கேற்ப மென்பொருளில் உரிய மாற்றம் செய்ய 90 நாட்கள் அவகாசம் வேண்டுமென பொது காப்பீட்டு மன்றம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பொது காப்பீட்டு மன்றத்தின் கோரிக்கையை ஏற்று தனது முந்தைய உத்தரவை தற்காலிகமாக நிறுத்திவைத்து உத்தரவிட்டார். இந்த நிலையில், இந்த வழக்கானது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போதைய சூழலில் அனைத்து வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் காப்பீடு திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவதற்கான சூழல் இல்லை என்று தெரிவித்து,
அந்த உத்தரவைத் திரும்பப் பெறுவதாக நீதிமன்றம் தெரிவித்தது.
அதேசமயம் பயணிகள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு உரிய திருத்தங்களை அரசு கொண்டுவரும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்த உயர் நீதிமன்றம், தமிழக அரசின் போக்குவரத்துத்துறை சுற்றறிக்கையை ரத்து செய்தும் உத்தரவிட்டது.
No comments:
Post a Comment