தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்கள்; கெடுபிடி உத்தரவால் பரபரப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பால் கடந்த மே மாதம் 10ஆம் தேதி முதல்
டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. பின்னர் நோய்த்தொற்று குறைந்ததை கருத்தில் கொண்டு படிப்படியாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதாவது, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட வேண்டும். மதுபானக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் உரிய
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.
படிப்படியாக தளர்வுகள் அறிவிப்பு
முகக்கவசம் அணிதல், கூட்டத்தை கட்டுப்படுத்த கம்பி வேலி அமைத்தல், கிருமி நாசினி கொண்டு கடைகளை சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அடங்கும். தற்போது நேரக் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டு மதுபிரியர்களுக்கு விற்பனை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி டாஸ்மாக் சில்லரை கடைகளில் மதுபானங்கள் விற்கப்பட்டு வருகின்றன.
சட்டவிரோத செயல்பாடுகள்
கடை ஊழியர்களோ, வாடிக்கையாளர்களோ கட்டுப்பாடுகளை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. திடீரென கொரோனா தொற்று அதிகரிக்கும் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை தற்காலிகமாக மூடும் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் எடுத்து
வருகின்றன. இந்த சூழலில் சில பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை ஒட்டிய
பார்கள் திறக்கப்பட்டு சட்டவிரோதமாக செயல்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு எச்சரிக்கை
இதுபற்றி டாஸ்மாக் மேலாண் இயக்குநருக்கு தகவல் சென்றுள்ளது. உடனே மதுக்கடைகளை ஒட்டியுள்ள மதுக்கூடங்கள் சட்டவிரோதமாக செயல்பட்டால், அதற்கு கடை ஊழியர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களை பொறுப்பாக்கி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேலாண் இயக்குநர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment