இது விபத்தல்ல, விபரீதம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 7, 2021

இது விபத்தல்ல, விபரீதம்!

இது விபத்தல்ல, விபரீதம்!

மூன்று வருடங்களுக்கு முன். இருள் பிரியாத அதிகாலை நேரம். எங்கோ சென்றுவிட்டுக் காரில், வீடு திரும்புகிறார் சௌந்தர்யா. ரஜினிகாந்தின் இளைய மகள். சென்னை ஆழ்வார்பேட்டை அருகில் அதிவேகமாய் வந்த அவரது கார், ஓரத்தில் நின்ற ஆட்டாவின் மீது மோதியது. ஆட்டோவில் உறங்கிக்கொண்டிருந்த ஓட்டுநர் அலறுகிறார். அவருக்குக் காலில் பலத்த காயம்.

சௌந்தர்யா, தனது அக்காள் கணவரும் நடிகருமான தனுஷூக்கு அலைபேச, சம்பவ இடத்துக்கு வந்த அவர், ஆட்டோ ஓட்டுநரிடம் பேசிப் பணம் கொடுத்து சமாதானம் செய்கிறார்.
இச்சம்பவம் குறித்து காவல் துறை விசாரிப்பதாகத் தகவல் வெளியாது. தொடர் தகவல் இல்லை.

இரு மாதங்களுக்கு முன் இரவு 11 மணிக்கு மேல் பாண்டிச்சேரியிலிருந்து சென்னை நோக்கி நீளும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அதிவேகமாய் பறந்து வருகிறது அந்தக் கார். ஓட்டி வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். உடன் அவரது நண்பர்கள்.

மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு என்ற இடத்தில் கார், தனது கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள (சென்டர் மீடியன்) தடுப்பில் மோதி விபத்து ஏற்படுகிறது.
யாஷிகாவின் தோழி வந்திசெட்டி பவானி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக பலியாகிறார். யாஷிகாஆனந்த்துக்குக் காலில் எலும்பு முறிவு. தலையில் பலத்த காயம். உடன் வந்த இரு ஆண் நண்பர்கள் லேசான காயத்துடன் தப்பிக்கின்றனர்.

ஒரு வாரத்துக்கு முன் நள்ளிரவில் கர்நாடக மாநிலம் கோரமங்களா பகுதியில் அதிவேகமாக சென்ற கார் விபத்துக்குள்ளாகிறது. காரில் பயணித்த எழுவரும் மரணமடைகிறார்கள். அவர்களில் ஒருவர், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் + ஓசூர் எம்எல்ஏ., பிரகாஷின் மகன், கருணா சாகர்.

48 மணிநேரங்களுக்கு முன் முன்னிரவில் சென்னை பெருங்களத்தூர் அருகே சென்ற அந்தக் கார் விபத்துக்குள்ளாகிறது. பயணித்த ஐந்து இளைஞர்கள் பலி.

விபத்துகளின் பொது அம்சம்

accident 1
இந்த விபத்துகள் எல்லாமே, பிரபலமானவர்கள் தொடர்புள்ள அல்லது அதிகம் பேர் மரணித்த விபத்துகள் என்பதால் கவனத்தைப் பெற்றிருக்கின்றன. இவை தவிர தினமும் இந்தியாவில் ஏராளமான விபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பாகச் சொல்லப்போனால், ஒவ்வொரு ஒரு மணிநேரத்துக்கும் 53 விபத்துகள்! இதன் காரணமாக 17 பேர் மரணமடைகின்றனர்!

அதாவது வருடம் 1.5 லட்சம் பேருக்கு மேல் மரணம்.

இந்தத் தகவல் ஏதோ ஒரு நிறுவனம் வெளியிட்ட தகவல் அல்ல. ஒன்றிய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டதுதான்

2017இன் கணக்கின்படி, இந்திய அளவில் விபத்துக்களில் முதலிடம் பிடிப்பது உத்தரப் பிரதேசம். இரண்டாம் இடம் தமிழ்நாடு. மூன்றாம் இடத்தில் மகாராஷ்டிரம்.

2019ஆம் வருடம், ‘லான்செட்’ இதழ் தெரிவித்த தகவலின்படி சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் உலக அளவில் 8.1 சதவீதம் அதிகரித்துள்ளன. இந்தியாவிலோ 58.7 சதவீதம் அதிகமாகியிருக்கின்றன.

இந்தியாவில் விபத்துகளில் பலியாவோரின் ஆண்டுக் கணக்கும் வெளியாகியிருக்கிறது. பாதசாரிகள் 76,729 பேர், மோட்டர் சைக்கிள் பயணிகள் 57,802 பேர், சைக்கிள் பயணிகள் 15,324 பேர் சாலை விபத்தில் மரணமடைந்துள்ளனர். காரில் பயணிப்போரின் மரண எண்ணிக்கை மிகக் குறைவே.

அதாவது கார்களினால் ஏற்படும் சாலை விபத்துகள் அதிகம். ஆனால் பலியாவது பாதசாரிகள், இருசக்கர ஓட்டிகள், சாலையோரவாசிகள் என்கிறது ஆய்வு.

சொகுசுக் கர்களின் மரண வேகம்
yashika car
யாஷிகாவின் கார்


கடந்த பிப்ரவரி மாதம் உலக வங்கி வெளியிட்டுள்ள இன்னொரு தகவலும், அதிர்ச்சி அளிக்கிறது. உலகின் பத்தில் ஒரு விபத்து இந்தியாவில்தான் நடக்கிறதாம். விபத்துக்களுக்குக் காரணம் மது என எளிதாகப் பழிபோட்டுவிடுகிறோம். ‘டிரிங்க் அண்ட் டிரைவ்’ தவறு எனப் பிரச்சாரம், காவல்துறை சோதனை, தண்டம் அல்லது லஞ்சம் என நடவடிக்கைகள் தொடரத்தான் செய்கின்றன.

மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுவது குறித்து நிறையப் பேசிவிட்டோம். விபத்து – பலிகளுக்கான இன்னொரு முக்கியக் காரணமான, ‘அதிவேகம்’ குறித்து ஏனோ பலரும் பேசுவதில்லை. மதுபோதை காரணமாக விபத்து ஏற்படுவது 28 சதவிகிதம். அதிவேகத்தால் ஏற்படுவது 60 சதவிகிதம் (இதர காரணங்கள் 12 சதவிகிதம்).

யாஷிகா, சௌந்தர்யா, கருணாசாகர் இதரர்கள் எல்லோருமே அதிவேகமாக காரை செலுத்தியிருக்கிறார்கள்.

யாஷிகா செலுத்தியது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின், ‘ஹெரியர் எஸ்யூவி’ வகை கார். கருணாசாகர் ஓட்டியது, ஆடி கார். ஊடக பாணியில் சொல்லப்போனால் இவை ‘சொகுசுக் கார்கள்’. இவற்றின் வேகம், மணிக்கு இருநூறு கிலோ மீட்டர்களுக்கு மேல்! தவிர, ‘எங்கள் தயாரிப்பு கார்கள், 100 கிமீ வேகத்தை வெறும் 6.8 வினாடிகளில் எட்டிவிடும்!’ என வாடிக்கையாளர்களிடம் பெருமையடித்துக்கொள்ளும் கார் நிறுவனங்கள் உண்டு. ரோல்ஸ்ராய்ஸ் கார் வேகம் 300 கிமீ. சில விநாடிகளில் 200 கிமீயை எட்டிவிடும்!

உலக அளவில் சாலை வசதியில் இந்தியா இரண்டாம் இடம். பெருமைதான். ஆனால், வாகனத்தைச் செலுத்த ஏதுவாக எத்தனை கி.மீ. சாலைகள் உள்ளன என்பதைச் சிந்திக்க வேண்டாமா?

நமது நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள்தான் மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்படுகின்றன. மொத்தமுள்ள சாலை தூரத்தில் இவை 1.8 சதவிகிதம்தான். ‘சாலை வசதி கோரி மக்கள் ஆர்ப்பாட்டம், சுடுகாட்டுக்கு சாலை வசதி இல்லை’ என வரும் செய்திகளை கவனித்தாலே போதும். நமது சாலைகளின் லட்சணம் தெரியும். இதில் அதிவேக ‘சொகுசு’ கார்கள் தேவையா? இவற்றை ஏன் அரசு அனுமதிக்கிறது?

அடுத்து பெட்ரோல், டீசல் பயன்பாடு. ‘பெட்ரோலைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள், அந்நியச் செலாவணியை மிச்சம் பிடியுங்கள்’ என்று பிரச்சாரமே நடக்கிறது. ஆனால், அதிவேக சொகுசு கார்கள், ஒரு லிட்டருக்கு ஐந்து முதல் பத்து கி.மீ. வரை மட்டுமே அளிக்கின்றன. இதனால் பெட்ரோல் பயன்பாடு அதிகரிக்கிறதே.

ஒன்றிய அரசு, சமீபத்தில், ‘15 வருடங்களுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட வாகனங்களால் அதிக புகை கிளம்பி சுற்றுச் சூழல் பாதிக்கிறது. அவற்றை பயன்படுத்தினால் கூடுதல் வரி செலுத்த வேண்டும்’ என்றது. அதிவேகக் கார்களால் அதிக பெட்ரோல் பயன்பாடு, அதிக புகை, சுற்றுச்சூழல் கேடு ஏற்படாதா?

வெளிநாட்டு சொகுசுக் கார்களை வாங்குவோரால், அந்நியச் செலாவணி வெளியில் செல்கிறதே. தவிர, பல கோடி ரூபாய்க்குக் கார் வாங்கும் பலர், சில லட்சம் வரி கட்ட முடியாமல் நீதிமன்றங்களை நாடி வரிக் குறைப்பு கேட்கிறார்கள்.

இப்படிக் கேட்ட நடிகர்கள் விஜய், தனுஷ் ஆகியோரைக் கண்டித்திருக்கிறது நீதிமன்றம். அப்படிக் கோருவது அவர்களது உரிமை என விட்டுவிடுவோம். அதே நேரம், வரிக்குறைப்புக்கு நீதிமன்றம் ஒப்புக்கொண்டிருந்தால் அந்த கார்களினால் கிடைக்கும் வரி வருவாயும் அரசுக்குக் குறையும்.

சட்டமும் தார்மீகமும்
rolls royce
‘சம்பாதிக்கிறார்கள், விலை உயர்ந்த கார் வாங்குகிறார்கள்; சட்டப்படி தவறில்லையே’ என வாதிடலாம். சாலை வசதி போதுமான அளவு இல்லாத நாட்டில் அதிவேகமாகக் காரைச் செலுத்தி விபத்து ஏற்படுத்துவது, அதில் பெரும்பாலும் பாதசாரிகள், இருக்கர ஓட்டிகள் பலியாவது, ஒரு வேளை உணவுக்கு வழியின்றி லட்சக்கணக்கில் பசியில் வாடும்போது லிட்டர் பெட்ரோலில் ஐந்து கி.மீ. செல்வது... எதுவுமே சட்டமீறல் இல்லைதான். ஆனால் தார்மீக ரீதியாகச் சிந்திக்க வேண்டாமா?

தார்மீக ரீதியாகச் சிந்தித்ததன் விளைவாகவே பல நல்ல சட்டங்கள் உருவாகியிருக்கின்றன.

குறிப்பிட்ட விலை, வேகம், எரிபொருள் பயன்பாடு, சுற்றுச் சூழல் சீர்கேடு இல்லாத வாகனங்களையே பயன்படுத்தும்படியான சட்டம் வேண்டும்!

ஒன்றிய அரசு இது குறித்துச் சிந்திக்க வேண்டும்!

ஒரு புறம் அதிவேக வாகனங்களை அனுமதிப்பது, இன்னொரு புறம் விபத்தில் மரணம் அதிகரிப்பது குறித்துக் கவலைப்படுவது. இதனால் எந்தப் பயனுமில்லை.

அறியாமல், தவறிப்போய் நடப்பதுதான் விபத்து. இந்தியச் சாலைகளுக்குப் பொருத்தமற்ற வேகம் கொண்ட கார்களை அனுமதிப்பது, அவற்றை அதிவேகமாக ஓட்டுவதில் இன்பம் காண்பது… இதெல்லாம் அறியாமல், தெரியாமல்தான் நடக்கின்றனவா?

விபத்துகளைக் குறைக்க வேண்டும் என்று உண்மையிலேயே அக்கறை இருந்தால் வேகக் கட்டுப்பாட்டைக் கண்டிப்புடன் அமல்படுத்துதல், அதிவேக வாகனங்களுக்கான அனுமதியை மறுபரிசீலனை செய்தல் ஆகிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லையேல் பிள்ளையைக் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டும் கதையாகவே இருக்கும்.

No comments:

Post a Comment

Post Top Ad