தாத்தா பிறந்தநாளில் காலமான பேரன்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
ஆசிரியராக இருந்து நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆண்டுதோறும்
ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பேரனும், முன்னாள் மத்திய சுகாதார துறை செயலளருமான
கேசவ் தேசிராஜு சென்னையில் உடல் நலக் குறைவால் காலமானார்.
இதய கோளாறு காரணமாக சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கேசவ் தேசிராஜு, சிகிச்சை பலனின்றி காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 66.
சென்னையில் பிறந்த கேசவ் தேசிராஜு, தொடக்க கல்வியை டேராடூனிலும், உயர்கல்வியை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் பயின்றார். இந்திய குடிமையியல் தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர், மத்திய சுகாதார துறை செயலாளராக பதவி
வகித்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டில் இந்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற அவர், அடையாறு புற்றுநோய் மையத்தின் அறங்காவலர் குழு உறுப்பினராகவும் உள்ளார்.
முன்னாள் குடியரசு தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் மகள் வழி பேரனான அவரது இறுதிச் சடங்கு நாளை காலை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேசவ் தேசிராஜுவின் மரண செய்தி அறிந்து மிகவும் வருந்துவதாக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment