பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் கடிதம்!
பொதுத் துறை நிறுவன சொத்துகளை தனியார் மயமாக்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
இது தொடர்பாக, தி.மு.க., தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதி உள்ள கடிதத்தில் தெரிவித்து உள்ளதாவது:
நம் நாட்டினுடைய பொதுத் துறை நிறுவனங்கள், நம் அனைவருடைய பொதுச் சொத்தாகும்.
அவற்றில் பலவும் இந்தியாவைத் தொழில் மயமான, தற்சார்புடைய நாடாக நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பவை. அத்தகைய பொதுத் துறை நிறுவனங்களை அமைப்பதற்கு, மாநிலங்களுக்குச் சொந்தமான அரசு நிலங்களோடு மக்களின் நிலங்களும் வழங்கப்பட்டு உள்ளன. அதனால், அந்நிறுவனங்களின் மீது மக்களுக்குப் பெருமையும், உரிமையும் உள்ளது.
மேலும், இந்தப் பணமாக்கல் என்னும் நடவடிக்கை, நாட்டின் பொருளாதாரத்தின் மீதும், தொடர்புடைய நிறுவனங்களின் பணியாளர்கள் மீதும், இந்நிறுவனங்களைச் சார்ந்து இயங்கும் சிறு - குறு தொழில் துறை மீதும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும்
தெரியவில்லை.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையை வைத்துப் பார்க்கும் போது, இவ்வளவு பெரிய அளவிலான தனியார் மயமாக்கல் நடவடிக்கையை, எந்தப் பெயரிட்டு அழைத்தாலும், அது விலைமதிப்பற்ற அரசுச் சொத்துகள் ஒருசில குழுக்கள் அல்லது பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் செல்வதற்கே வழிவகுக்கும்.
No comments:
Post a Comment