ஆசிரியர்கள் தின ஸ்பெஷல்; முதல்வர் ஸ்டாலின் செஞ்ச காரியம்!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், செப்டம்பர் 5ஆம் நாள் இந்தியத் திருநாட்டுக் கல்வியுலகமும் ஆசிரியருலகமும் போற்றும் நன்னாள். பைந்தமிழ்நாட்டு ஆசானாகப் பணியாற்றிப் பார் போற்றும் இந்தியக் குடியரசுத் தலைவராகப் பவனிவந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பெருமையோடு இணைத்து ஆசிரியப் பெரியோர்களின் பெருமை பாடும் இனிய நாள். இந்த இனிய நாளில் தமிழ்நாடு ஆசிரியர்கள் யாவருக்கும் என் உளம் கனிந்த நல்வாழ்த்துகள்.
என்றும் அழியாத கல்வி
"வெள்ளத்தால் அழியாது
வெந்தழலால் வேகாது
கள்வராலும் கொள்ளத்தான் முடியாது
கொடுத்தாலும் நிறைவன்றிக் குறைவுறாது"
எனப் போற்றப்படும் கல்வி. அதனைப் பயிற்றுவிக்கும் பணியினை ஈடுபாட்டோடு செய்து வரும் ஆசிரியர்கள், சமுதாயம் எனும் கடலின் கரையில் உள்ள கலங்கரை விளக்கங்கள். ஆசிரியப் பணி என்பது ஏட்டுக் கல்வியைப் புகட்டுவது மட்டுமன்று. அது, மனிதர்களை - அதுவும் மாமனிதர்களை உருவாக்கும் மகத்தான பணி. புனிதப்பணி. கைதேர்ந்த சிற்பிகளால்தான் கல்லையும் சிலையையும் வேறுபடுத்த இயலும். ஆசிரியரும் அவ்வாறே மாணவர்களின் அறியாமையைக் கல்வியறிவு என்னும் சுத்தியால் செம்மைப்படுத்தி, அறிவுள்ள செய்திகளைப் புகுத்தி அவர்களை உயர்ந்த மாணவர்களாய் உருவாக்குகிறார்.
No comments:
Post a Comment