மாணவிக்கு கொரோனா தொற்று; தமிழக அரசுப் பள்ளி மூடல்!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை ஒட்டி மூடப்பட்டிருந்த பள்ளிகள், கடந்த ஒன்றாம் தேதி திறக்கப்பட்டன. முதல்கட்டமாக 9, 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்கள் மட்டும் வரவழைக்கப்பட்டனர். ஒரு வகுப்பில் 50 சதவீத மாணவர்கள் என சுழற்சி முறையில் பாடம் நடத்த திட்டமிடப்பட்டது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர்
பள்ளிகளுக்கு திரும்பிய மாணவர்கள், தங்களது நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து வீட்டிலேயே முடங்கிக் கிடந்ததால் மாணவர்கள் மன அழுத்தத்தில் இருக்க வாய்ப்புண்டு.
அமைச்சர் நேரில் ஆய்வு
எனவே அதிலிருந்து விடுபட்டு பள்ளிச் சூழலுக்கு ஏற்ப தயார் செய்யும் வகையில் 45 நாட்கள் புத்துணர்வு வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளை திறப்பை ஒட்டி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சில பள்ளிகளில் நேரில் ஆய்வு செய்தார். அவர்களின் மனநிலை குறித்து கேட்டறிந்தார். இதேபோல் அமைச்சர்கள் சிலர் தங்களது தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
மறுபுறம் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. அவர்களுக்கென்று பிரத்யேக முகக்கவசம் எதுவும் வடிவமைக்கப்படவில்லை.
நாமக்கல் பள்ளி மூடல்
இந்த சூழலில் பள்ளிகளுக்கு வரவழைக்க வேண்டாம் என்று சமூக ஆர்வலர்கள் பலர் கோரிக்கை விடுத்து வந்தனர். மூன்றாவது அலை எச்சரிக்கை விடப்பட்டிருந்தால், இன்னும் சில காலம் மாணவர்கள் வீட்டிலிருந்த படியே கல்வி கற்கட்டும் என்று வலியுறுத்தினர். இந்த சூழலில் நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி 10ஆம் வகுப்பு
மாணவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சக மாணவிகள், ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளனர். உடனே பாதிக்கப்பட்ட மாணவி தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment