ஹேப்பி நியூ இயர் சொல்லலாம்.. சியர்ஸ் சொல்ல முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு!
புதுச்சேரியில் டிசம்பர் 31ஆம் தேதி இரவு 10 மணி முதல் ஜனவரி 1ஆம் தேதி அதிகாலை 1 மணி வரை மதுபானங்கள் விற்க சென்னை உயர்
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களை அனுமதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், டிசம்பர் 31ஆம் தேதி இரவு 10 மணி முதல் ஜனவரி 1ஆம் தேதி அதிகாலை 1 மணி வரை மதுபானங்கள் விற்க கூடாது என தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
ஒமைக்ரான் பரவி வரும் நிலையில், புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க கோரி, கரிக்காலம்பாக்கம் கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஜெகன்நாதன் என்பர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் கொரானா பரவலை கருத்தில் கொள்ளாமல் புதுச்சேரி அரசு புத்தாண்டு கொண்டட்டாங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் டி. பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதுச்சேரியில் குவிந்து வருகின்றனர். அண்டை மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
புதுச்சேரி அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மாலா, தடுப்பூசி போட்டிருந்தால்தான் விடுதிகளில் தங்க முடியும், கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்ற வேண்டும், விடுதிகளில் 50 சதவீதம் நபர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்
இதையடுத்து, மதுபான விற்பனைக்கு ஏன் தடை விதிக்க கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த புதுச்சேரி அரசு வழக்கறிஞர், கொண்டாட்டங்களுக்கு தடை விதித்த மாநிலங்களில் கூட, மதுபான விற்பனைக்கு தடை விதிக்கவில்லை. மாநில அரசின் வருவாயை கருத்தில் கொள்ள வேண்டும் என்றார். பொது இடங்களில் மதுபானங்கள் அருத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் இதை கண்காணிக்க சிறப்பு படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பில் புதுச்சேரியின் நிலை மோசமாக இல்லை என்று கூறிய அவர், அந்தந்த மாநிலங்களின் நிலையின் அடிப்படையில் முடிவெடுக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாகவும், மக்கள் நலனில் எந்த சமரசமும் செய்து கொள்ளப் போவதில்லை எனவும் வாதிட்டார். மேலும், மக்களின் நிலை, பொருளாதார சூழ்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். இந்த இரண்டு நாட்கள் மதுபான விற்பனை வருமானம்தான் அரசு ஊழியர்களின் அடுத்த இரண்டு மாதங்களுக்கான ஊதியம் எனவும் அவர் தெரிவித்தார்.
மகிழ்ச்சியான செய்தி; ரயில் மின் வழிப்பாதை சோதனை ஓட்டம் வெற்றி!
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களை மேற்கொள்ளலாம். ஆனால், டிசம்பர் 31ஆம் தேதி இரவு 10 மணி முதல் ஜனவரி 1ஆம் தேதி அதிகாலை ஒரு மணி வரையிலான மூன்று மணி நேரத்துக்கு மாநிலத்தில் உள்ள மது விற்பனை கடைகள், பார்கள், ஹோட்டல் உடன் இணைந்த பார்கள் ஆகியவற்றில் மதுபானங்கள் விற்க மற்றும் அங்கு அமர்ந்து அருந்த அனுமதிக்க கூடாது என தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும், இரண்டு தவனை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களை, பொது இடங்களில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் அனுமதிக்க கூடாது. அதிகாரிகள், போலீசார், தடுப்பூசி சான்று கேட்டால் பொதுமக்கள் காண்பிக்க வேண்டும். பிரபலங்கள் பொது இடங்களில் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள கூடாது. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது சட்டபடியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரானா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், பொதுமக்களின் சுகாதார நலனில் எந்த சமரசமும் செய்யகூடாது என தெரிவித்து, வழக்கு விசாரணையை ஜனவரி 3ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
No comments:
Post a Comment