திருடனும் திருடரும்: எளியவர்கள் என்றால் இளக்காரமா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, December 28, 2021

திருடனும் திருடரும்: எளியவர்கள் என்றால் இளக்காரமா?

திருடனும் திருடரும்: எளியவர்கள் என்றால் இளக்காரமா?


செய்திகளில் இவருக்கு இன்ன மரியாதை தர வேண்டுமென்ற நியதிகளை ஊடக உலகம் உடைத்தெறிய வேண்டும். குற்றவாளிகளிலும் எளியவர்களையும் வலியவர்களையும் பாரபட்சமாகக் காணும் போக்கை நிறுத்துவோம்.
ஆணை அவன் என்றும் பெண்ணை அவள் என்றும் குறிப்பிடுவது வழக்கம். பேச்சு, எழுத்து இரண்டிலுமே இது உண்டு. மரியாதையாகக் குறிப்பிடும்போது ஆணை ‘அவர்’ என்றும் பெண்ணை ‘அவங்க’ / ‘அவர்கள்’ என்றும் குறிப்பிடுவதுண்டு. இது பேச்சில். எழுத்து என்று வரும்போது இருவரையுமே அவர் என்று குறிப்பிடுவதே ஆகிவந்த மரபு. குறிப்பாக, செய்தித்தாள் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களிலும் இதுவே ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபு.

இப்போது எதற்காக இந்த வெட்டி ஆராய்ச்சி என்கிறீர்களா? செய்திகளில் ஒரு சிலரை மட்டும் ‘அவன்’, ‘அவள்’ என்று குறிப்பிடுவதை அண்மைக் காலங்களில் அதிகமாகப் பார்க்க முடிகிறது. யாரை மரியாதையுடன் ‘ர்’ விகுதி பயன்படுத்திக் குறிப்பிடுவது, யாரை அவ்வாறு குறிப்பிட வேண்டாம் என்பதைச் சில ஊடகங்கள் தாங்களாகவே வரையறுத்துக்கொள்கின்றன. அச்சு ஊடகம் என்றில்லை, காட்சி ஊடகத்திலும் இதே வழக்கம்தான்.

வெறுமனே ஒற்றை வரியில் மரியாதையை நிர்ணயிப்பதோடு இது முடிந்துவிடுவதில்லை. சம்பந்தப்பட்டவர் குறித்த விவரக் குறிப்புகளும், அவரது உருவமும் ஒரு செய்தியில் இடம்பெறுவதா, வேண்டாமா என்பதுகூட இதே போன்ற அளவுகோல்களில் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. பெரும்பாலான நேரங்களில் இது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகவே அமைகிறது.

எளியவர்கள் என்ற இளக்காரம்!

‘கொள்ளையன் கைது’, ‘திருடன் பிடிபட்டான்’ என்ற வார்த்தைகளை தினசரியில் பார்க்க முடியும். ஆண்கள் மட்டுமல்ல, ஏதேனும் குற்ற நடவடிக்கைகளில் பெண்கள் ஈடுபட்டது தொடர்பான செய்திகளிலும் இதே கதைதான். அவள், இவள் என்றே சம்பந்தப்பட்ட பெண் செய்திகளில் விவரிக்கப்படுவார். காதல், கலவி சார்ந்த கொலைகள், கொள்ளைகள் என்றால் கேட்கவே வேண்டாம். இது பற்றிச் சம்பந்தப்பட்ட செய்தி ஆசிரியர்களிடம் கேட்டால், ‘வழக்கமாக டீக்கடைகளிலும், மரத்தடி பஞ்சாயத்துகளிலும், விழாக்கால கூடுதல்களிலும், அரட்டைகளிலும் இவர்கள் பேச்சு வழக்கில் இப்படித்தானே விளிக்கப்படுகின்றனர்’ என்ற காரணத்தைப் பதிலாகச் சொல்வார்கள். அதாவது, குற்றவாளிகளுக்குப் பொதுப்புத்தியில் இருக்கும் மரியாதையைப் பிரதிபலிக்கிறார்களாம்.

ஆனால், அரசியலிலோ வணிகத் துறையிலோ பல ஆயிரம் கோடி ரூபாய்களை மோசடி செய்ததாகச் சொல்லப்படும் நபர் மட்டும் ’அவர்’ என்றே மரியாதையுடன் விளிக்கப்படுவார். இதுபோன்றவர்களையும் பொதுமக்கள் அவன், அவள் என்றே குறிப்பிட்டுப் பேசுகிறார்கள். ஆனால், ஊடகங்கள் இங்கே பொதுப்புத்தி அளவுகோலைப் பயன்படுத்துவதில்லை. ஏன்?

சின்னச் சின்னத் திருட்டுகள், வழிப்பறிகள், காதல் தொடர்பான குற்றங்கள் ஆகியவற்றைச் செய்பவர்கள் அல்லது அவ்வாறு குற்றம் சாட்டப்படுபவர்கள் சமுதாயத்தில் மேல் தட்டில் இருப்பவர்கள் அல்ல. ஆனால், வணிகம், அரசியல், திரைப்படம் போன்ற துறைகளில் இருப்பவர்கள் சமுதாயத்தில் மேல் தட்டில் இருப்பவர்கள். இவர்கள் செய்ததாகக் கருதப்படும் குற்றங்கள் ஆயிரம் கோடி என்னும் அளவில் இருக்கலாம். கலவரம், கொலை என்பதாகக்கூட இருக்கலாம். ஆனாலும் இவர்களுக்கு அவர் என்னும் அந்தஸ்து கிடைத்துவிடும். குற்றப் பின்னணி இருக்கிறதோ, இல்லையோ, எளிய மனிதர்கள் என்றால் இளக்காரம் என்பதுதான் இதற்கு அடிப்படை.


அடையாளச் சிதைப்பு!

‘குடிபோதையில் இருந்த பெண் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்’ என்ற செய்தி இரு வாரங்களுக்கு முன்னர் ஒரு மாலை நேரத் தினசரியில் வந்தது. பேருந்தில் ஏறியது முதல் குடி போதையில் அவர் உளறியதும், பயணிகள் அவதிப்பட்டதனால் போலீசில் ஒப்படைக்கப்பட்டார் என்றும் தகவல்கள் இருந்தன. அந்தப் பெண் தொடர்ச்சியாக மது அருந்தினாரா அல்லது அன்று மட்டும் அருந்தினாரா, மது அருந்தும் சூழல் எப்படி வாய்த்தது, அந்தச் செயலுக்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்று எந்த கேள்விக்கும் பதில் இல்லை. ஆனால், சம்பந்தப்பட்ட பெண் எந்த ஊரைச் சேர்ந்தவர், யாருடைய மனைவி என்பது மட்டுமல்லாமல், அவருடைய புகைப்படமும் அதில் இடம்பெற்றிருந்தது.

அந்தப் பெண் வாழும் சமூகத்தில், இது தனிப்பட்ட முறையில் அவருக்கு மரியாதைக் குறைவை ஏற்படுத்தாதா? ஒரேயொரு செயல் மூலம், ஒருவருடைய வாழ்க்கைப் பயணத்தையே மாற்றும் தீர்ப்பைத் தீட்டும் அதிகாரம் ஊடகங்களுக்கு எப்போது வாய்த்தது?

‘பீர் பாட்டிலை உடைத்து கான்ஸ்டபிள் தகராறு’ என்ற மற்றுமொரு செய்தி. சம்பந்தப்பட்ட நபர் ஒரு உயரதிகாரியாக இருந்தால் கண்டிப்பாக அவரது புகைப்படம் இடம்பெற்றிருக்காது. இவ்விரு செய்திகளிலும் சம்பந்தப்பட்ட இடங்களில் இருந்த யாரோ ஒருவரால் அல்லது பலரால் அக்காட்சி மொபைலில் படம்பிடிக்கப்பட்டதனால் அவர்களது படங்கள் வெளியாகின.

எந்தவொன்றையும் உடனடியாகப் பதிவு செய்து பகிரங்கப்படுத்தும் மக்களின் பெருவாரியான மனநிலை இதன் பின்னிருக்கிறது. குற்றங்களில் ஈடுபட்டாலும் சரி, பாதிக்கப்பட்டாலும் சரி, இப்படிப் பகிரங்கப்படுத்துவதனால் சம்பந்தப்பட்டவரின் அடையாளம் சிதைக்கப்பட்டு அழிக்கப்படும் என்று தெரிந்தும் இச்செயல் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. சமூக ஊடகங்களில் இத்தகவல்கள் பல்கிப் பரவுவது ஒருவகை வக்கிர மனோபாவம் என்றால், அதிகாரப்பூர்வமான அந்தஸ்தைப் பெற்றிருக்கும் ஊடகங்களும் அதே தவறைச் செய்வது எப்படி நியாயமாகும்? எளியவர்களைப் பற்றிய கூடுதல் தகவல்களை மட்டும் உடனுக்குடன் தருவதுதான் ‘எக்ஸ்க்ளூசிவ்’ தர்மமா?

அனிச்சையாகத் தொடரும் மனோபாவம்!

அப்படியானால் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தவர்களை, சமூக ஒழுக்கங்களை மீறியவர்களை, குற்றச் செயல்பாடுகளில் ஈடுபட்டவர்களை மரியாதையுடன் குறிப்பிட வேண்டுமா என்ற கேள்வி பதிலுக்கு எழுப்பப்படலாம். சமூகத்தில் அந்தஸ்து பெற்றிருக்கிற, பொருளாதாரத்தில் வளமுற்றிருக்கிற, சாதியைக் கொண்டு தீர்மானிக்கப்படும் அளவுகோல்களோடு பொருந்திப்போகிறவர்கள் மட்டும், ஏன் ஊடகங்களில் இப்படியொரு மரியாதைக் குறைவுக்கு ஆட்படுவதில்லை? வெறுமனே செய்திகளை முடிவு செய்யும் ஊடகவியலாளர்களின் தனிப்பட்ட மனோபாவம் மட்டும் இதற்குக் காரணமில்லை. இவர் உயர்ந்தவர், இவர் தாழ்ந்தவர் என்று நம் மனதில் விதைக்கப்படும் (அ)நீதிகளே இதன் பின்னிருக்கின்றன.
பெற்றோர் இருவரையும் ‘நீ’, ‘வா’, ‘போ’ என்று ஒருமையில் விளிக்கும் அல்லது இருவரையுமே ‘ங்க’ விகுதியோடு அழைக்கும் வழக்கம் நம் சமூகத்தில் உண்டு. தன்மை, முன்னிலை மட்டுமல்லாமல் படர்க்கையிலும்கூட இது தொடர்வதுண்டு. ஆனால், படர்க்கையில் தந்தையைக் குறிப்பிட ‘ர்’ விகுதியையும், தாயைக் குறிப்பிட ‘ள்’ விகுதியையும் பயன்படுத்தும் வழக்கம் பலரிடம் இருக்கிறது. குறிப்பாகப் புனைவுகளில் இதைத் தவறாமல் பார்க்கலாம். 50 வயதான கணவர் ‘அவர்’ என்று குறிப்பிடப்படுவார். அதே பெண்ணாக இருந்தால் 90 வயதானாலும் ‘அவள்’தான்.

தந்தையை ‘அவன்’, ‘இவன்’ என்று சொல்வது மரியாதைக் குறைவு என்றெண்ணும் சமூகம், தாயை ‘அவள்’, ‘இவள்’ என்று சொல்வதை அவ்வாறு நினைப்பதில்லை. ஒருவர் தன் சகோதரிகளையும், மனைவியையும் இன்னபிற பெண்களையும் இப்படி நோக்குவதுகூடத் தவறுதான். ஆண்கள் விஷயத்திலும்கூட, சமுதாயத்தின் கீழ்த்தட்டுக்களில் இருப்பவர்களுக்கும் இதே கதிதான். வழிவழியாகத் தொடரும், அனிச்சையாக நம்மோடு ஒட்டிக்கொள்ளும் இந்த மனோபாவத்தை வெட்டியெறிவது மட்டுமே இதற்கான தீர்வாக இருக்க முடியும்!
செய்திகளில் இவருக்கு இன்ன மரியாதை தர வேண்டுமென்ற நியதிகளை ஊடக உலகம் உடைத்தெறிய வேண்டும். இல்லை, குற்றம் இழைத்தவர்களை அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரியாதை தரக் கூடாது என்று கருதினால், அதனை அனைத்து மக்களுக்கும் பொதுவானதாக மாற்றுவதே சரி. எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் ஓர் எடை என்று பாரதியார் சொன்னதை நாம் கடைப்பிடிப்போம். குற்றவாளிகளிலும் எளியவர்களையும் வலியவர்களையும் பாரபட்சமாகக் காணும் போக்கை நிறுத்துவோம்.

மனநிலை மாறினால் மொழி நிலை தானாகவே மாறும் என்பது உண்மைதான். அதே நேரத்தில் பொது ஊடகங்களில் பயன்படுத்தும் மொழியில் மாற்றம் வந்தால் அது பொது மனப்பான்மையிலும் மாற்றத்தை மெல்ல மெல்லக் கொண்டுவரும்.

No comments:

Post a Comment

Post Top Ad